முஸ்லிம் பெண்கள் இருவருக்கு உணவளிக்க மறுத்த உணவகம். அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் எனவும் விமர்சனம்.

பாரிஸ் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்று முஸ்லிம்  பெண்கள் இருவருக்கு உணவளிக்க மறுத்த சம்பவம் கடும் கண்டனத்தையும் பொதுமக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் நகரில் உள்ள உணவகத்தில் முகத்திரை அணிந்த குறிப்பிட்ட இஸ்லாமிய பெண்கள் உணவருந்த சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த உணவகத்தின் நிர்வாகி ஒருவர் இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசியதுடன் அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என கூறியுள்ளார்.

மட்டுமின்றி அவர்களுக்கு உணவு தரவும் மறுத்துள்ளார். நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து குறிப்பிட்ட உணவகம் முன்பு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் இன்று ஒன்று திரண்ட மக்களிடம் அந்த உணவக நிர்வாகி மன்னிப்பு கோரியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு பிரச்னைகளில் இருந்து எழுந்த வெளிப்பாடே அந்த கோபமான பேச்சு எனவும், அதற்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தமது நண்பர் ஒருவரும் இறந்துள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றபோது அந்த உணவகத்தில் உணவருந்திய பெண் ஒருவர் இந்த தகவலை தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

இதையடுத்தே குறிப்பிட்ட உணவகத்தின் முன்பு இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்க பொதுமக்கள் கூட்டம் கூடினர்.

இதனிடையே குறிப்பிட்ட பெண்களிடம் பேசிய இஸ்லாமிய அமைப்பு ஒன்று, அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடியும் எனவும், ஆனால் அந்த உணவகம் முன்பு எந்த வித போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

Comments