ஷாக்கீர் நாயக்கிற்கு எதிராக சதி: அவரது உரைகளை தடை செய்ய பொலிஸ் பரிந்துரை

மும்பை

முஸ்லிம் மத போதகர் ஷாக்கீர் நாயக்கின் பேச்சை தடை செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வங்கதேச தலைநகர் தாகா மற்றும் சில நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மும்பையில் உள்ள இஸ்லாமிய மத போதகர் ஷாக்கீர் நாயக்கின் பேச்சு மற்றும் வீடியோ தங்களை கவர்ந்ததாக கூறியிருந்தனர். இதனையடுத்து ஷாக்கீர் நாயக் சர்ச்சையில் சிக்கினார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை ஷாக்கீர் மறுத்ததுடன், பயங்கரவாத செயல்களையும் கண்டித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், ஜாகிர் நாயக் பேச்சு குறித்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மும்பை போலீசின் சிறப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், ஷாக்கீர் நாயக்கின் பேச்சு, பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்தனர்.

இந்த அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தனர்.அறிக்கை சமர்பித்ததை மும்பை கூடுதல் கமிஷனர் உறுதி செய்துள்ளார். ஷாக்கீர் நாயக்கின் பேச்சுக்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து மாநில அரசிடம் சமர்பித்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில், ஷாக்கீர் நாயக் பேச்சை தடை செய்ய வேண்டும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இந்த அறிக்கையில், மற்ற மதத்தினர் குறித்த ஷாக்கீர் நாயக்கின் பேச்சு பிரச்னைக்குரியது எனவும், அவரது தொண்டு நிறுவனம் இளைஞர்களை ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர தூண்டுவது போல் செயல்படுவதாகவும், ஷாக்கீர் நாயக் மற்றும் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை குறித்து சட்ட ரீதியில் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Comments