வரிபத்தான் சேனை: கல்வியில் கூர்மையடைந்து வரும் சகோதர ஊர்...

கல்வியே எங்கள் உயிர். கல்வி மீதான வளர்ச்சியை பேசுவதும், பகிர்வதும் கூட எமக்கு தனியான ஆனந்தம்.

கிழக்கு மாகாணத்தின் கீழ் உள்ள 17 கல்வி வலயங்களில் ஒன்றான சம்மாந்துறை வலயத்தின் இறக்காமக் கல்விக் கோட்டத்தின் முக்கிய ஊரே வரிப்பத்தான் சேனை.

இறக்காமம் பிரதேச செயலகத்தின் 12 கிராம பிரிவில் 3 பிரிவுகள் இங்கே உள்ளன. வரிப்பத்தான் சேனையிலே 04 பாடசாலைகள் உள்ளன. அதில் 2 பாடசாலைகள் 1C என்பது ஒரு சிறப்பாகும்.
இங்கே அண்மைக் காலம் முதல் கல்வி மீதான பார்வை வியாபிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஆர்வமும், கூர்மையும் ஆசிரியர் என்ற வட்டத்தையும் தாண்டி மாணவர், பெற்றோர், பொது நிறுவனங்கள் என இங்கே இப்போது பரவலடைந்து வருகிறது.

இந்த ஊர் மக்கள் இயல்பாகவே மிகவும் ஒற்றுமையானவர்கள். "தங்கள் ஊர்" என்று சிந்திப்பதிலும், செயற்படுவதிலும் வல்லவர்கள். இவர்களின் ஒற்றுமை உணர்வு நல்ல விடயங்கள் மீது திரும்புமாயின் அதை வெல்ல யாரும் வர முடியாது. "தேச உணர்வும், தான் சார் சமூக எழுச்சி மீதான பற்றும் ஒருபோதுமே வெறுக்கத்தக்க விடயமாகாது" என்று இப்னு ஹல்தூன் கூறுவதை நாம் நினைவு கூரலாம்.

மிக அண்மைக் காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பொறியியல் பீடத்திற்கு தெரிவு பெற்றதை இந்த ஊரின் கல்வி மீதான "மைற் கல்" எனலாம். ஆனால் இன்னும் இந்த மண்ணில் ஒரு மருத்துவர் கூட உருவாக வில்லை என்பது அந்த மக்களின் பெரும் கவலையாகும். அதையும் அதே குடும்பத்தை சேர்ந்த "ஹாமீத் மௌலவி புஷ்ரா" என்ற மாணவி வைத்தியத்துறையின் சித்த மருத்துவத்துக்கு (யூனானி) தெரிவு பெற்று வரிப்பத்தான்சேனையின் "ஹெற்றிக்" சாதனையைக் குறித்த குடும்பமும், ஊர் மண்ணிற்கு பெருமையும் சேர்த்துள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.
முகாமைத்துவ, கலை, வர்த்தக, ஆங்கில மொழி, சட்டம் ஆகிய துறைசார் பட்டதாரிகள் இங்கே உருவாகி விட்டார்கள். அதிகமான ஆண், பெண் மாணவர்கள் தற்போது பல்கலைக்கழகங்களில் கற்று வருகிறார்கள். சம்மாந்துறை கல்வி வலயத்திலே ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் அதிக பாடசாலைகள் இங்கே உள்ளன. கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், உடற் கல்வி, சமயம் ஆகிய பாடங்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இவற்றை சமூக நிறுவனங்களே நிவர்த்திக்கும் நிலை உள்ளது.

அத்பால் எகடமி
Edva varipathan chenai
ATS institute
ஆகிய சமூக நிறுவனங்கள் கணிசமான பங்களிப்பைச் செய்கின்றன. புள்ளி விபரங்கள் நோக்கப்படின் இவை குறை வளர்ச்சியாகவே உள்ளது. என்றாலும் வளர்ச்சி இங்கே உறுதியாகவே ஏற்படுகிறது. என்பதே எமக்கு முக்கியம். கல்விக்காக செலவு செய்ய பெற்றோர் துணிந்துவிட்டார்கள்.
பிராந்திய ஊர்களை நோக்கின் வணிகம், விவசாயம், இறைச்சிக்கான மாடு வியாபாரம் என்பன வற்றுக்கு கூடுதல் சாத்தியம் இங்கே உள்ளதைக் காணலாம். சிறப்பான பெருந் தெருக்களும், வணிக கட்டிட அமைப்பும் இறக்காமத்தை விடவும் மிகவும் சிறப்பாக இங்கே உள்ளது.
வெளிவாரிக் கற்கை மூலம் அதிகமான பெண் பட்டதாரிகளும் இங்கே உரிவாகியுள்ளதுடன், பெண் ஆசிரியை யாரும் இங்கே இதுகாலவரை உருவாகாமல் உள்ளது மிகவும் கவலை தருகிறது.

இறக்காமத்திற்கும் மூத்த ஊரான இது கல்வி 
மீது கொண்ட கரிசனை இன்னும் மென்மையாகவே உள்ளது. கல்வியைப் பெறலில் இவர்கள் இன்றும் இறுக்கமான பிடியை ஏற்படுத்த வேண்டும். "எம்மால் முடியும்" என்ற நகர்வை படித்த மக்கள் முன்னே வந்து செயற்படுத்த வேண்டும். கல்வி மீது அக்கறை கொள்ளாத மாணவரைத் தண்டிக்கும் ஆசிரியரை பெற்றோர் தாக்க முற்படும் செயலை எதிர்க்கும் மனோநிலை இங்கே உருவாக வேண்டும்.

அண்மையில் உருவான லீடர் பாடசாலை, அல்- அஷ்ஹர் வித்தியாலயம் என்பன காட்டும் முனைப்பை பெரிய பாடசாலையான அல்- அமீன் காட்டுவதாக அறிய முடியவில்லை. தாய்ப் பாடசாலையானது இன்னும் கல்வியை மக்கள் மயப்படுத்த வேண்டும். கல்வியிலே நாம் பின்தங்கிய ஊர் என்பதால் எமக்கு எந்த சலுகையையும் அரசு பொதுப் பரீட்சைகளில் வழங்கி விடாது.

மாவட்ட, தேசிய மட்டத்தில் எமது மண்ணும் போராடியே வெற்றி பெற வேண்டும். வெட்டுப் புள்ளியிலே அக்கரைப்பற்று, கல்முனை, என நாமும் சமமாகவே கணிக்கப் படுகிறோம். எனவே நாம் ஓடி ஓடிப் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களைத் துரத்தும் தடயங்கள் மறைந்து விடும் தூரத்துக்கு அவர்கள் போய் விடுவார்கள்.



எமக்கும் இலவச கட்டிடம்
எமக்கும் இலவச பாடநூல்
எமக்கும் இலவச சீருடை
எமக்கும் இலவச ஆசிரியர் நியமனம்
எமக்கும் அதே ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில்
ஜீ சீ ஈ (சா/த), (உ/த) இதுதான் அரச நியதி.
வெல்வோம். பெற்றோர் கவனம் கொள்வோம்.

ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.

Comments