மட்டக்களப்பில் இடம்பெற்ற தீவிபத்தில் கடை முற்றாக எரிந்து நாசம்!

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் தகரக் கொட்டில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடை ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.


காத்தான்குடி-02 மௌலானா கபுறடி வீதியில் இன்று (28) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தகரக் கொட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கும், மின்சார சபைக்கும் அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்ததுடன் அங்கு வருகை தந்த பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் அருகிலுள்ள துவிச்சக்கரவண்டி திருத்தும் கடையும் சிறியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

எரிந்து போன தகரக் கொட்டில் கடலை வண்டி வியாபாரி ஒருவரினால் சில காலமாக உணவு தயாரிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து காரணமாக சிறுகடை வியாபாரிக்கு சுமார் 20,000 ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments