கிண்ணியாவில் அதிபர்களுக்கான நியமனங்களை வழங்குங்கள் -இம்ரான் மஹ்ரூப்

திருகோணமலை, கிண்ணியாக் கல்வி வலயத்திலுள்ள புதிய அதிபர்களை பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு; திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கோரிக்கை விடுத்து கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமுக்கு இன்று புதன்கிழமை தான் கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கிண்ணியாக் கல்வி வலயத்தில் 16 ஆசிரியர்கள் போட்டிப் பரீட்சையின் மூலம் இலங்கை அதிபர் சேவை தரம் 03க்கு தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ஒரு மாதகால வதிவிடப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வழங்கப்பட்டு 02 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், இந்த அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்படாமலுள்ளதாக அவர்கள் கடந்த 31ஆம் திகதி என்னிடம் தெரியப்படுத்தினர்.
கிண்ணியாக் கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைகளில் 32 பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக எனக்குத் தெரியவந்துள்ளது. எனவே, இந்த வெற்றிடங்கள் நிலவுகின்ற பாடசாலைகளில் புதிய அதிபர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்’ என்றார்.

Comments
Post a Comment