ஜனாதிபதியின் இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டது ஏன்?

AUGUST 30TH, 2016
ஜனாதிபதியின் இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டது ஏன்?


FacebookTwitterGoogle+LinkedInE-mail
CONTRIBUTORS

Editorial Team

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலுள்ள பாதுகாப்பு குறைவு தொடர்பில் ஜனாதிபதியை தெளிவூட்டும் நோக்கிலேயே, ஜனாதிபதியின் இணையத்திற்குள் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே சட்டத்தரணி இந்த விடயத்தை தெளிவூட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியை தெளிவூட்டுவதும் தமது தரப்பினரின் நோக்கம் என சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தமது தரப்பினர் எந்தவித குற்றவியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவி, அதிலிருந்த தரவுகளில் மாற்றங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 17 வயதான சிறுவனொருவனும் அடங்குவதுடன், அந்த சிறுவன் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரான 27 வயதுடைய நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (tw)

Comments