கண்டியில் டெங்கு நோயினால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் - பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு...

கண்டி – சுதுஹூம்பல பிரதேசத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே கும்பத்தை சேர்ந்த 5 பேரில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

14 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்னர் அந்த பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதும் கண்டி மாநகர சபையில் புகை அடிப்பதற்கான செயற்பாட்டிற்கு யாரும் வரவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த பிரதேசம் நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைகுள் அமைந்திருப்பதுடன், எந்த ஒரு நிறுவனமும் அந்த பொறுப்பை நிறைவேற்றுவதில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும் நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ள சிறுவன் அண்மையில் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதிக தலை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பரிசோதனைகளின் பின்னர் டெங்கு நோய் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த சிறுவன் கண்டி மருத்துவனையில் இருந்து பேராதனை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி அனுப்பபட்டிருந்தார்.

இந் நிலையிலேயே அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக எமது செய்தி சேவை கண்டி மாநகர சபையின் சுகாதார அதிகாரி மருத்துவர் யாபகேவிடம் வினவியது,

அந்த பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோய் தொடர்பாக மலேரியா தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments