செய்தி குறித்து நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதி பணிப்பு!

அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளமான Sydney morning Herald இல், புதன்கிழமை  வெளிவந்த செய்தி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

அத்துடன், இந்தச் செய்தி தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு, சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு, நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2009ஆம் ஆண்டு விவசாய மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பணியாற்றியபோது, அவரது பணிக்குழாமின் உத்தியோகத்தர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தி குறித்து, ஜனாதிபதி தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

அவ்வாறான ஒரு சம்பவத்துடன் தமக்கு எவ்விதமான தொடர்போ, பங்களிப்போ இருக்கவில்லையென தெரிவிக்கும் ஜனாதிபதி, மேற்குறிப்பிட்ட செய்தி தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் அவ்வாறான ஊழல் மற்றும் முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடவோ, அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ, அவ்வாறான செயற்பாடுகளில் சம்பந்தப்படவோ இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளதாக, குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments