தேன் மீது ஆசைப்பட்டு கரடியிடம் கண்ணை இழந்தார்!!

திருகோணமலை மொறவெவ காட்டுப் பிரதேசத்துக்கு தேன் எடுக்க சென்ற போது கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

கரடி தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபரொருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலில், பன்குளம் 04ஆம் கண்டத்தைச் சேர்ந்த கே.முருகையா (64 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

கரடி முகத்தில் பாய்ந்து  ஒரு  கண்ணை தோண்டியதுடன் கால் பகுதியையும் கடித்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மொறவெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்ற போது, ஒவ்வொருவரும் காட்டுக்குள் பிரிந்து சென்று தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போது விழுந்து கிடந்த முதிரை மரமொன்றில் தேன் கிடந்ததாகவும் அதனை எடுக்க முற்பட்டபோது, மரத்துக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த கரடி முகத்தில் பாய்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்துள்ளார்.

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments