நிந்தவூரில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவருக்கு கிடைத்த உயரிய பணி.
பாக்கியசாலிகளை நாம் இவ்வுலகில் அடையாளம் கண்டு கொள்வதென்பது மிகவும் அரிது. இருந்தாலும் உலகில் நாளுக்கு நாள் இஸ்லாமும் அதன் கொள்கைகளும் விருத்தி அடைந்து கொள்ளும் தறுவாயில் நிந்தவூரில் அண்மையில் ஒருவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு தற்போது தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாக்கியசாலியாக உயரிய பணியினை செய்து கொண்டு வருவது இன்றைய தினம் எமது கமறாக்களுக்கும் பட்டுள்ளது.
அந்த வகையில் மறுமையில் கழுத்து நீண்டவராக வரும் பாக்கியம் பெற்ற அருளம்பலம் முஹம்மட் ஆரிஸ் அவர்கள் இன்றைய தினம் (28) நிந்தவூர் நலன்புரிச் சபையின் ஏற்பாட்டின் கீழ் அதன் சமய கலாச்சாரப் பிரிவின் அனுசரணையுடன் நிந்தவூரில் காணப்படும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தின்களுக்கான தொடர் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில் சிறந்த முஅத்தினாக கெளரவிக்கப்பட்டார்.
கடந்த 20ம் திகதி முதல் 28ம் திகதி வரை நிந்தவூர் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலில் முஅத்தின்களின் மாண்பும், அவர்களின் பொறுப்புக்களும் கடமைகளும் எனும் தலைப்பில் ஆரம்பமான இந்தப் பயிற்சிப் பட்டறையில் நிந்தவூரைப் பிரதிநிதித்துவம் 32 முஅத்தின்மார்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நிந்தவூர் உலமா சபையின் தலைவர் மெளலவி எம்.ஐ.எம். ஜெளபர், நிந்தவூர் நலன்புரிச் சபையின் தவிசாளரும், முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.எச்.யாக்கூப் ஹசன், உப தவிசாளர் பொறியியலாளர் ரி. இஸ்மாயில், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. நஸீர் அஹமட், சமய கலாச்சாரப் பிரிவின் பணிப்பாளர் அஷ்-ஷேஹ் மெளலவி ஏ.எம்.அஸ்ஹர் உள்ளிட்ட நலன்புரிச் சபையின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment