சிறுமியை தாக்கிய வளர்ப்புத் தாய்க்கு விளக்கமறியல்; சிறுமி சார்பில் 6 சட்டத்தரணிகள் ஆஜர்

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய வளர்ப்புத் தாயை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் வீடொன்றில் வளர்ப்புத் தாய் ஒருவர் சிறுமியை மூர்க்கத் தனமாக தாக்கும் காணொளி பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் , கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட வளர்ப்புத் தாயாரை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் குறித்த வளர்ப்புத் தாயாரை பொலிஸார் இன்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் க. அருமைநாயகம் உத்தரவிட்டார்.

ஏனைய 3 பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் தந்தை தொடர்பான நடவடிக்கை, தொழில் ஆகியவற்றை ஆராய்ந்து விசாரணை செய்யுமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த காணொளியின் உண்மைத் தன்மை, சிறுமியைத் தாக்கப்பயன்படுத்திய கத்தி தொடர்பான உண்மைத் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அவற்றை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments