90 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்!
90 இலங்கை தமிழ் அகதிகள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இன்று வருகைதர உள்ளனர்.அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதிப்படுத்தலுடனும், ஒருங்கிணைப்புடனும் இவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
சுயவிருப்பின் பேரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் திருச்சியிலிருந்தும், 15 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் சென்னையிலிருந்தும் வரவுள்ளனர். இவர்களில் 45 ஆண்களும் 45 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி, அம்பாறை, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
இவர்களுக்கு இலங்கையை வந்தடைவதற்கு இலவசமாக விமான பயணச்சீட்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.
அத்துடன் மீள்சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்கடொலர்களும், உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 அமெரிக்கடொலர்களும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment