இலங்கையை இந்தியா வற்புறுத்தவில்லை!

எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளுமாறு இலங்கையை இந்தியா வற்புறுத்தவில்லை என இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

எட்கா உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு காலவரம்பு எதையும் விதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்பு வந்த அவர், நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

இந்தப் பேச்சுக்களின் பின்னர், நேற்று அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுடன் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை தாஜ் சமுத்ரா விடுதியில் நடத்தினார்.

இலங்கையுடன் எட்கா உடன்பாட்டை செய்து கொள்வதற்கு இந்தியா எதிர்பார்த்திருக்கிறது.

எனினும், எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளுமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்கவில்லை.

அதுபோலவே, எட்கா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கும் இலங்கைக்கு காலஎல்லை எதுவும் விதிக்கப்படவில்லை.

எட்கா உடன்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன. எந்த தடைகள் இருந்தாலும் அவை அகற்றப்படும்.

எட்கா உடன்பாடு குறித்த அடுத்த கட்டப் பேச்சுக்களை நடத்த இலங்கை குழு அடுத்த மாத முதல் வாரத்தில் இந்தியா வரும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Comments