கல்முனை மாநகர சபையில் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்ரிப்பு; சேவைகள் முடக்கம்!
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகரை கைது செய்யக் கோரி மாநகர சபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்ரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாநகர சபை, முழுமையாக பூட்டப்பட்டு, அனைத்து சேவைகளும் அன்றாட நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளதுடன் மாநகர சபைக்குட்பட்ட எந்தவொரு பிரதேசத்திலும் குப்பை அகற்றும் சேவையும் இரண்டாவது நாளாக இடம்பெறவில்லை. அத்துடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்கள், ஆயுர்வேத மருந்தகங்கள் என்பனவும் இயங்கவில்லை.
அதேவேளை கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் அழைப்பாணையை ஏற்று குறித்த வர்த்தகர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு முன்வந்திருப்பதாக தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ அப்துல் கப்பார் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது நகரில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக வாகனத் தரிப்பு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது அதன் உரிமையாளர், ஆணையாளரை மோசமான வார்த்தைகளினால் தூற்றி, அவமானப்படுத்தி, அச்சுறுத்தியதுடன் அவரை தாக்கவும் முற்பட்டதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டும் அவர் கைது செய்யப்படாததைக் கண்டித்ததே மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு, ஆர்ப்பாட்டம், பேரணி மற்றும் சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


Comments
Post a Comment