ஒரு சிறந்த ஆசிரியரிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள்.

காதலன் – காதலி, பெற்றோர் – குழந்தைகள், கணவன் – மனைவி, நண்பர்கள் என மற்ற அனைத்து உறவுகளையும் விட உயர்ந்தது ஆசிரியர் – மாணவர்கள் உறவு. இதில் கனவுகள், உழைப்பு, எதிர்பார்ப்பு, கண்ணியம், நேர்மை, வெற்றி, தோல்வி என அனைத்துமே அதிகம்.

ஆசிரியர்கள் இல்லாத உலகு, ஆணிவேர் அற்ற ஆலமரத்தை போல. எப்போது சாய்ந்து விழும் என யாருக்கும் தெரியாது. சில இடங்களில் நீங்கள் கண்டிருக்கலாம்.., சில மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மீது மிகவும் ஈர்ப்புடன் காணப்படுவார்கள், அதற்கான காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

நேர்மறை எண்ணங்கள்.

ஒருவரது வாழ்வில் அவருக்குள் அதிகமான நேர்மறை எண்ணங்கள் ஒருவர் விதைத்திருக்கிறார் எனில், அது ஆசிரியரை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. இந்த நேர்மறை எண்ணம் தான் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

சிலர் கடவுளின் பால் நேர்மறை ஈர்ப்புக் கொண்டிருப்பார்கள். எனவே, தங்களது கஷ்டம், இன்பம் என அனைத்தையும் கோவிலுக்கு சென்று பகிர்ந்துக் கொள்வார்கள். சிலர் நண்பர்கள் பால் நேர்மறை ஈர்ப்பு கொண்டிருப்பார்கள். இவ்வகையில் மாணவ வயதில் பெரிதாக நேர்மறை ஈர்ப்பு ஏற்படுவது ஆசிரியருடன் தான்.

அறிவாற்றல்.

பெரும்பாலும் ஆசிரியர் மீது நேர்மறை ஈர்ப்பு ஏற்படுவதற்கு காரணம் அவர்களது ஆழமான அறிவாற்றல் தான். ஓர் சூழலை கடந்து வர அவர்கள் கூறும் வழிகள், முன்னேற்ற பாதைக்கு அவர்கள் இட்டுக் கொடுக்கும் நற்பாதை போன்றவை மாணாக்கருக்கு ஆசிரியர் மீது நேர்மறை ஈர்ப்பு அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

தீர்வு.

முதலில் வாழ்கையில் ஏற்படும் சறுக்கலின் போது தோள் தூக்கிவிட பெரியவர்கள் வீட்டில் இருந்தனர். இப்போது அந்த சூழல் குறைந்து வருகிறது. இவ்விடத்தை ஆசான்களால் மட்டுமே நிரப்ப முடியும்.

நம்பிக்கை.

ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் கூட இந்த நேர்மறை ஈர்ப்பிற்கான முக்கிய கருவியாக இருக்கிறது. எந்த ஒரு மாணவனும் தன் ஆசான் மீதான நம்பிக்கையை இழப்பதில்லை.

ஆசிரியர் என்பது சம்பாத்தியம் என்பதை தாண்டிய ஓர் பெரும் பணி. அடுத்த சமுதாயத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆசிரியர்கள் தான். எனவே, ஆசிரியர் பணியையும் மற்ற வேலை அல்லது தொழில் போல காண வேண்டாம்.

இரகசியம்.

 நண்பன், காதலி, அம்மா, அப்பா, சகோதரன் என யாரிடம் கூறும் இரகசியங்களும் வெளிவரும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், தன் தனிப்பட்ட பிரச்சனையை பற்றி மாணவன் ஆசிரியரிடம் கூறும் தகவல்கள் காக்கவும் படுகின்றன. அதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.

வழிகாட்டி.

ஆசிரியரை விட ஓர் சிறந்த வழிகாட்டி இவ்வுலகில் இல்லை. தன் ஆசைகளை திணிக்கும் பெற்றோர்களை விட, அவனுள் இருக்கும் ஆசைக்கும், கனவுகளுக்கும் சிறகுகளை பரிசளித்து வானில் உயர பறக்க உதவும் ஆசிரியர்கள் என்றும் சிறந்தவர்கள்.

வானம்.

மாணவர்கள் எத்தனை உயரம் பறந்தாலும் அவர்களுக்கு வானமாய் இருப்பது அவர்களது ஆசிரியர்கள் தான். பள்ளி எனும் கூண்டுக்குள் அடைப்பட்டு தன் குஞ்சுகளை வானில் பறக்க வைத்து மகிழும் ஒரே ஜீவன் ஆசிரியர்கள் தான். இவையெல்லாம் தான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது நேர்மறை ஈர்ப்பு ஏற்பட காரணமாகும்.

முன்மாதிரி.

பெரும்பாலும் நாம் கண்ட, காணும் மேதைகளின் முன்மாதிரிகள் அவர்களது ஆசிரியர்கள் தான். மாணவர்களுக்குள் ஒவ்வொருவரும் சிறந்தவன் என்ற எண்ணத்தை விதைப்பவர்கள் ஆசிரியர்கள். வெற்றி என்பது எட்டிப்பிடிக்கும் தூரம் என்பதை கற்றுக் கொடுத்தவர்கள் ஆசிரியர்கள்.

வெற்றி இடம்.

வெற்றிடமாக இருந்த பிரபஞ்சத்தை வெற்றி இடமாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள். பள்ளியில் இருப்பவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் அல்ல. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதேனும் ஒன்றை கற்றுக் கொடுக்கும் அனைவரும் ஆசிரியர்கள் தான்.


Comments