Skip to main content

கைதி தூக்கிட்ட சம்பவம் : பொதுமக்கள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் : பொலிஸாரை இடமாற்ற கோரிக்கை : அமைச்சர் திகா சம்பவ இடத்துக்கு விஜயம்

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி நுவரெலியா பிரதான வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் பொதுமக்கள் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைதி ஒருவர் தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளதாகவும் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி உட்பட அனைவரையும் உடனடியாக இடமாற்ற செய்ய கோரியும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதேசத்தில் பற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நுவரெலியாவுக்கான போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக கொழும்பிலிருந்து சென்ற அமைச்சர் திகாம்பரம் கைதி தூக்கிட்டு கொண்ட இடத்தை பார்வையிட்டதுடன் பொலிஸாரை இடமாற்ற தான் நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
நீதிமன்ற பிடியாணையின் பிரகாரம் கைது செய்யப்பட்டு புசல்லாவை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 28 வயதான ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் என்பவரே, தனது காற்சட்டை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபரை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியமைக்காக, சம்பவம் இடம்பெற்றபோது கடமையில் இருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments