நாமல் ராஜபக்ஸ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அவதூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் இன்று ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதை அடுத்து, உயர்நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
தமது கட்சிக்காரர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாதென, நாமல் ராஜபக்ஸ சார்பாக ஆஜரான சட்டத்தரணி இதன்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆயினும், அவரது வாதத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அவதூறு விளைவித்தமை தொடர்பில் நாமல் ராஜபக்ஸ மீது அடுத்த மாதம் 3 அம் திகதிக்கு முன்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவித்துள்ளது..

Comments