Posted by
Kantalai News
.பான் கி மூனும், முஸ்லிம் விவகாரமும்"
(இன்று -02- வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். இன்றும் நாளையும் அவர் இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களில் கலந்துகொள்வார்.
நேற்றிரவும் இன்றும் கொழும்பில் அரச தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தும் பான் கி மூன் இன்று மாலை காலிக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் சென்று கூட்டமைப்பினரையும் வடக்கு ஆளுநரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அரசாங்கம் மற்றும் எதிர்த்தரப்புக்களுடனான பேச்சுவார்த்தைகளின்போது நலலிணக்கம்,பொறுப்புக்கூறல் செயற்பாடுகள், ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் பான் கி மூன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதன்போது தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசாரணை பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அமைய வேண்டியதன் அவசியம் என்பன குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமப்பு பான் கி மூனுக்கு விளக்கமளிக்கும் எனவும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரே பான் கி மூன் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக கலந்துகொள்ளும் இறுதி பொதுச் சபை கூட்டத் தொடராக அமையும்.
இதன் காரணமாக அவர் ஐ.நா. செயலாளர் என்ற வகையில் இலங்கைக்கு மேற்கொள்ளும் இறுதி விஜயம் இதுவாகும்.
எனினும் பான் கி மூன் தனது விஜயத்தின் போது இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளோ அல்லது முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளோ மேற்கொள்ளப்படவில்லை என்பது ஒரு குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பான் கி மூன் இலங்கை முஸ்லிம்களின் விவகாரத்திலும் சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி கொழும்பில் இன்று காலை ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடாத்தப்படவுள்ளது.
அதேபோன்று வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு தமிழ் தலைவர்களைச் சந்திக்கும் அவர், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கிழக்கு மாகாமாத்திற்கும் அவர் விஜயம் செய்ய வேண்டும் என மற்றொரு கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் பான் கி மூனின் விஜயமானது இலங்கை வெளிவிவகார அமைச்சினாலும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினாலும் ஏலவே திட்டமிடப்பட்டதாகும்.
இந்த வருட ஆரம்பத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஹுசைன் இலங்கைக்கு வருகை தந்த போதும் அவர் முஸ்லிம் தரப்பினைச் சந்தித்திருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
எனவே வெ ளிவிவகார அமைச்சோ அல்லது இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகமோ முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லையா என்பதே இங்கு எழும் கேள்வி. இந்தக் கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் எழுப்ப வேண்டியது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும்.
.


Comments
Post a Comment