கிளிநொச்சி இளைஞன் மீது பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல்!
இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் கிளிநொச்சியில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
உழவு இயந்திரமொன்றைச் செலுத்திச் சென்ற குறித்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் இன்று ஏ9 வீதியில் வைத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை விலக்குவதற்குச் சென்ற பொலிஸார், குறித்த இளைஞன் மீது கனத்த இரும்புச் சங்கிலியால் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறித்த இளைஞன் தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க முற்பட்டதாகவும், மது போதையில் இருந்ததாகவும் கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தவறு செய்திருந்தாலும் கூட இவ்வாறு முரட்டுத்தனமாக தாக்கியுள்ளமை பாரிய மனித உரிமை மீறலாகுமென பிரதேச கல்வியியலாளர்கள், தெரிவித்துள்ளனர்.



Comments
Post a Comment