மேன் முறையீடு செய்தாலும் துமிந்தவுக்கு பிணை இல்லை!

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சீ-3 சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அணியும் வெள்ளை சாரம் மற்றும் வெள்ளை சேட்டை நேற்று மாலை முதல் அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தங்க வைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியில் பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக துமிந்த சில்வா தரப்பினர் மேன் முறையீடு செய்யவுள்ளனர். இவ்வாறாக மேன் முறையீடு செய்தாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பிணை வழங்கப்படாது என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மேன் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை அறிவிக்க சில காலம் செல்லும் எனவும் அதற்கமைய அது வரை அவர்களுக்கு பிணை வழங்கப்படாது எனவும் அந்த வழக்கின் தீர்ப்பில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் மாத்திரமே அவர்களுக்கு வெளியில் வர முடியுமெனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments