மகிந்தவினால் போடப்பட்ட திட்டமே மலேசியாவில் தூதுவர் தாக்கப்பட்டமை: அஜித் மன்னபெரும

இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை மற்றும் மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன மஹிந்த உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் சதி முயற்சி என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும தெரிவித்துள்ளார்.


குறித்த ஆர்ப்பாட்டங்கள் நீண்ட காலங்களுக்கு முன்பே போடப்பட்ட திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளின் மாநாட்டிற்கு வந்திருந்த ஏனைய நாட்டு பிரபலங்களினது அனுதாபத்தை பெறுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மஹிந்தவால் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த அனுதாபங்களினுடனே அவர் நாட்டை வந்தடைந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் மூவர் இந்தியர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து மலேசிய அரசு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கியதுடன், இவர் இலங்கை திரும்புவதன் நிமித்தம் கோலாலம்பூர் விமான நிலையம் வரை மஹிந்தவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments