மைத்திரி இன்று நியூயோர்க் பயணமாகிறார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியூயோர்க் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கதற்காக, ஜனாதிபதி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் நாளை ஆரம்பமாகி 26ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 21ஆம் நாள் உரையாற்றுவார். ஐ.நா பொதுச்சபையில் மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்கள் கயந்த கருணாதிலக, மகிந்த சமரசிங்க, பைசர் முஸ்தபா உள்ளிட்டோரும் நியூயோர்க் செல்கின்றனர்.

அதேவேளை, வெனிசுவேலாவில் நேற்று ஆரம்பமாகிய அணிசேரா நாடுகளின் 17ஆவது உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை.

அவரது பிரதிநிதியாக அமைச்சர் மகிந்த சமரசிங்கவே இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். அணிசேரா நாடுகளின் அமைப்பின் ஆரம்பகால உறுப்பு நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இந்த மாநாட்டை இம்முறை இந்தியப் பிரதமரும், இலங்கை ஜனாதிபதியும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடனான நெருக்கமே இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களின் இந்த முடிவுக்கு காரணம் என்று பரவலான கருத்து நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments