அம்பாறை மாவட்ட கழகங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் முதற்தடவையாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு முதற்தடவையாக விளையாட்டுத்துறை அமைச்சினூடாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று (01) வியாழக்கிழமை மக்கள் நடமாடும் சேவையின் போது இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனையிலுள்ள 40 விளையாட்டுக் கழகங்களுக்கு இதன்போது விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை தவிசாளர் கலப்பதி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கழகங்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களை வலுப்படுத்தும் முகமாக இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் மற்றும் மாவட்டத்தின ஏனைய பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள பிரதேசங்களிலுள்ள விளையாட்டு மைதானங்கள் முதற்தடவையாக விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படுகின்றது என பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.


Comments