கடலரிப்பை பார்வையிடச் சென்ற அமைச்சருக்கு நேர்ந்த கதி : ஒழுவில் பகுதியில் பதற்றம்

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பை தடுக்கும் நோக்கில்  பார்வையிடுவதற்காக இன்று முற்பகல் அங்கு சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையிலான குழுவினரை அப்பிரதேச மக்கள்  வழிமறித்து திரும்பிச் செல்லவிடாது தடுத்தமையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

கடலரிப்பினால் ஒலுவில் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுடன் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தை பல அரசியல் வாதிகள் பல தடைவகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனரே தவிர ஆக்கபூர்வமான  நடவடிக்கை எதனையும் இதுவரை முன்னெடுக்கவில்லை எனவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால கோபமடைந்த பிரதேச  மக்கள் மற்றும் மீனவர்கள் கடற்கரைக்குச் செல்லும் வழியை மறித்து கட்டைகள், கற்கள் என்பவற்றைப் போட்டு திரும்பிச் செல்லவிடாது வழிமறித்து வைத்துள்ளனர்.

தமது பிரதேசம் தொடர்ந்து கடலரிப்பினால் சேதமடைந்து வருவதை தடுப்பதற்கு காத்திரமானதும் உறுதியானதுமான நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை அவ்விடத்திலிருந்து செல்வதற்கு விடமாட்டோம் எனவும் தெரிவிக்கின்றனர்.

Comments