அதிபர் சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் செப்டம்பர் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதிபர் சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அறிவித்துள்ளார்.

பல வருடங்களாக அதிபர் சேவையில் சகல தரத்திலுமுள்ள அதிபர்கள் படுமோசமான பிரச்சனைகள் பலவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இன்றுவரை அம்முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக, கல்வியமைச்சால் எந்த வித நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என  இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தீர்வு நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, அதிபர்களை அலையவிட்டு அவர்கள் மூலமாக பல்வேறு செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் மட்டும் கல்வியமைச்சு கவனம் எடுத்து வருவதாகவும், அதிபர் சேவை நியமனம் வழங்குவதில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


Comments