மட்டக்களப்பு வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 9.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இசை நிகழ்ச்சியினைக் கண்டுகளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தபோது, சத்துருக்கொண்டான் பொலிஸ் சாவடிக்கு அருகில் உள்ள வீதி வளைவில் வைத்து, வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமல் மரம் ஒன்றில் மோதிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில், ஆறுமுகத்தான்குடியிருப்பினை சேர்ந்த வி.ரதிதரன் (17 வயது), க.விதுசன் (17 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது விதுசன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லையெனவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments