“பௌத்த தேரர்களிடையே பிளவுகள் ஏற்படாதவாறு விகாரைகள் தேவாலயங்கள் சட்டம் சமர்ப்பிக்கப்படும்” : ஜனாதிபதி

பௌத்த தேரர்களுக்கிடையில் பிளவுகள், முரண்பாடுகள், விவாதங்கள் ஏற்படாதவாறு மூன்று மகாநாயக்கத் தேரர்களினதும் ஆலோசனைகள், ஆசீர்வாதங்களுடன் விகாரைகள் தேவாலயங்கள் சட்டம் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தபோதிலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட விவாதங்கள் காரணமாக அதனை மேலும் தள்ளிப்போடுமாறும் மீண்டும் அனைத்து மகாநாயக்கத் தேரர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தான் பௌத்த சாசன அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் இதன் போது தெரிவித்தார்.

பேராதனை, ஹொடகந்தெனிய வரலாற்றுப் பெருமைமிக்க ஹுருக்ஹுதே  புராண விகாரையின் தாதுகோபத்துக்கு மங்கள சீலா மீள்நிறுவுதல் மற்றும் புதிய சம்புத்தத்வ ஜெயந்தி தர்மபோதனை மண்டபத்தை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று எமது நாடு உலகில் முக்கியமான இடத்திலிருப்பதற்கு காரணம் எமது நாடு தேரவாத பௌத்த மதப்பிரிவின் மையமாக இருப்பதனாலே எனவும் தெரிவித்த ஜனாதிபதி, பௌத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளவேண்டிய அனைத்துப் பொறுப்புக்களையும் நிறைவேற்றும் அரச கொள்கைக்கமைய தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் கூறினார்.

இன்று சிலர் பல்வேறு ஊடகங்கள் மூலம் மிக மோசமான பொய்களையும் வெறுப்பேற்படுத்தும் வகையில் தெரிவித்து வருவதாகவும் இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி, சம்புத்த சாசனத்தின் உன்னதமான மையங்களான அஸ்கிரிய மற்றும் மலவத்த பீடங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள்  தொடர்பில் தான் மிகவும் கவலையடைவதாகவும் கூறினார்.

நேற்று பிற்பகல் விகாரைக்கு சென்ற ஜனாதிபதியவர்கள் விகாராதிபதி வணக்கத்துக்குரிய சுமணசார தலைமைத் தேரரைச் தரிசித்து அவரது சுகநலன்களைக் கேட்டறிந்ததன் பின்னர் மத நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்துக்குரிய வறக்காகொட ஞானரத்ன தேரர் இந்த நிகழ்வில் ஆசீர்வாதம் வழங்கியபோது, புலதிசிபுர கமக்காரரின் புதல்வாரன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது நாட்டுக்காக நிறைவேற்றும் சிறப்பான பணிப்பொறுப்புக்களை பெரிதும் பாராட்டினார்.

போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் ஒழிப்பு செயற்திட்டம், சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களைப் பாராட்டிய மகாநாயக்க தேரர் அச்செயற்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்வது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகுமெனவும் குறிப்பிட்டார்.

மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திம்புல்கும்புறே விமலதம்ம தேரரவர்கள் உள்ளிட்ட முப்பிரிவுகளையும் சேர்ந்த தேரர்களும், மத்திய மாகாண ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்க, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன ஆகிய பிரமுகர்கள், துறவிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவானோரும் இப் புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டார்கள்

Comments