குழந்தைகளுக்கு கட்டாயம் போட வேண்டிய தடுப்பூசிகள்!
குழந்தை பிறந்த 45 நாட்கள் ஆனவுடன் முத்தடுப்பு ஊசி, போலியோ சொட்டு மருந்து (முதல் தவணை) தரப்படவேண்டும். இப்போது DPT எனப்படும் Triple Antigen, HIB எனப்படும் மூளைக் காய்ச்சல் தடுப்பு ஊசி, B வகை மஞ்சள் காமாலைத் தடுப்பு எல்லாம் சேர்ந்து Pentavalent என்ற ஊசி அரசுத்துறை மூலம் அளிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளிலும் போடலாம். இந்த முத்தடுப்பு ஊசி (acellular DPT) வலி இல்லாததது. சிறிது வலி ஏற்படுத்தக் கூடியது (whole cell DPT) என்று இரண்டு வகைகள் உள்ளன. வலி இல்லாதது விலை அதிகம். கிடைப்பதும் அரிதாக உள்ளது. அதிகம் விலைகொடுத்தாலும் அதனால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி சுமார் 10 வருடங்கள் தான் நிலைக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. எனவே தடுப்பு ஊசி போட்டு 24 மணி நேரம் வரை தொடைப்பக்கம் வலி, வீக்கம் லேசான காய்ச்சல், சிணுங்கல், அழுகை, இருந்தாலும் சாதாரண தடுப்பு ஊசிதான் நல்லது.
ஓரிரு நாட்கள் குளிக்க வைக்கக் கூடாது. காய்ச்சல், மற்றும் வலிக்கு மாத்திரைகள் மருத்துவர் தருவார். ஊசி போட்ட இடத்திற்கு வெந்நீர் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கூடாது. அழுத்தித் தேய்க்கவும் கூடாது. ஊசி போட்ட தொடைப் பகுதியில் 2-3 வாரத்திற்கு ஒரு சிறு உருண்டை போல வீக்கம் இருக்கலாம். இது தானாக மாறிவிடும்.
குழந்தைக்கு வலிப்பு நோய், மூளை வளர்ச்சி பாதிப்பு போன்ற மருத்துவக் காரணங்கள் இருந்தால் விலை அதிகமான ஊசியை மருத்துவர் பரிந்துரை செய்வார். குழந்தைக்கு 30 நாட்கள் முடியும் வரை அந்த சொட்டு மருந்து ஜீரண மருந்து எதுவும் தேவையில்லை. இரண்டு மாதத்திலிருந்து Vitamin D சொட்டு தினமும் வெறும் வயிற்றில் 400 IV தரப்பட வேண்டும். குழந்தைக்கு ரத்த சோகை இருந்தால் இரும்பு சத்து சொட்டு மருந்து (Iron drops) தரப்பட வேண்டும். இவற்றை மருத்துவரே அறிவுறுத்துவார்!


Comments
Post a Comment