சீன பாதுகாப்பு மாநாட்டிற்கு செல்லும் கோத்தபாய – கருணாசேன!

சீன தலைநகர் பீஜிங்கில் இன்று ஆரம்பமாகும் 7ஆவது சியெங்ஸான் பாதுகாப்பு மாநாட்டில், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரும் பங்கேற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் பாதுகாப்பில் எதிர்கொள்ளும் சவால்கள், தீவிரவாதத்தை ஒழித்தல் மற்றும் பிராந்திய வலயத்தின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைள் என்பவற்றை மையமாகக் கொண்டு, மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இம் மாநாட்டில் 64 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400இற்கும் அதிகமான  பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

கடந்த அரசாங்கத்துடன் சீனா நெருங்கிய உறவை கொண்டிருந்த நிலையில், சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கோத்தபாய சீனா சென்றுள்ளார்.

அவரது வெளிநாட்டு பயணத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Comments