களுத்துறை ஹீனெட்டிகல பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல்
களுத்துறை பிரதேச சபைக்குட்பட்ட ஹீனெட்டிகல ஜும்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் இனந்தெரியாதோரினால் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலின் இரண்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.
களுத்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொருத்தப்படாமையால் அருகிலுள்ள வர்த்தக நிலையங்களின் சி.சி.ரி.வி. கமரா பதிவுகளைப் பெற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பு பள்ளிவாசலில் தப்லீக் ஜமாஅத் ஒன்று தங்கியிருந்ததாகவும், அவர்களிடம் தாம் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாகவும் அங்கு இருக்க வேண்டாமெனவும் இனந்தெரியாதோர் வந்து எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எச்சரித்து சென்ற சில மணித்தியாலங்களின் பின்பே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் அச்சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலினுள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் ஹீனெத்திகம ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம். எஸ். ஹம்சா விளக்கமளிக்கையில்;ஹீனெட்டிகல ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். களுத்துறை பிரதேச சபைக்குட்பட்ட இக் கிராமம் ஒன்றிலேயே முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சுற்றிலும் பெரும்பான்மை மக்களே வாழ்கிறார்கள்.
சிங்களவரும் முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையுடன் பேதங்களின்றியே இங்கு வாழ்கிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த பன்சலைகளின் குருமாரும் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்கள். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை. வெளியார் எவரோ இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்களாலேயே பள்ளிவாசல் தாக்கப்பட்டிருக்கிறது என நாம் சந்தேகிக்கின்றோம்.
களுத்துறை பொலிஸ் உயரதிகாரிகள், உளவுப் பிரிவினர் ஸ்தலத்துக்கு வந்து விசாரணைகளை நடத்தினார்கள். தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதி பொலிஸ் மா அதிபர் பள்ளிவாசலின் சேதத்துக்குள்ளான கண்ணாடிகளை அரச செலவில் மாற்றித் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.வெளிநபர்கள் இரு சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலையை உருவாக்குவதற்கே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம் என்றார்.


Comments
Post a Comment