அச்சத்துடன் இனவாதத்தை எதிர்கொள்ளும், இலங்கை முஸ்லிம் அறிஞர்கள்



இனவாதம் எனும் தலைப்புகளில் பேசப்படும் எல்லா உரைகளிலும், அல்லது விழிப்பூணர்வூட்டல் எனும் பெயரில் எழுதப்படும் கட்டுரைகளில் எல்லாம் எமது அறிஞர்கள் சொல்ல வருவது எது தெரியுமா? பேரினவாதிகளை எப்படி சந்தோசமாக வைத்துக்கொள்வது? அவர்களின் கோபப்பார்வை எம் மீது படாமல் இருக்க நாம் என்ன செய்வது? எனும் விடயத்தை மையப்படுத்தி மாத்திரமே உரைகளும், கட்டுரைகளும் வலம் வருவதை நாம் அவதாணிக்கலாம். சிறந்த அறிஞர்கள் கூட உரையாற்றும் போது நீங்கள் “பெருநாளைக்கு வட்டிலப்பம், பலகாரம் போன்றவற்றை அந்நியர்களுக்கும் அன்பளிப்பு செய்யுங்கள்” என கூறுமளவு நிலமை போயுள்ளது.

இனவாதத்தைக் குறைக்க வழி சொல்லச் சென்றவர் அந்நியர்களை சந்தோசப்படுத்த வட்டிலப்பம் கொடுங்கள் என சொல்கிறார்களே தவிர யாரும் மார்க்க ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதாக புரிய முடியவில்லை. “இனவாதத்தை எப்படி எதிர்கொள்வது?” தலைப்புகளை அதிகமானோர் பார்வையிடுவதுகூட தம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பொருளாதாரத்தை எப்படி பாதுகாப்பது? ஊரை எப்படி பாதுகாப்பது? என்ற நோக்கில்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இதில் என்ன உள்ளது? இதை எப்படி இஸ்லாம் அனுகச்சொல்கிறது? இதற்கு என்ன விலை கொடுக்கவும் தயார் என்ற மன நிலையில் எவரும் வழிகாட்டுவதுமில்லை, அதில் பயன்பெருபவர்களும் அதை நோக்காகக் கொள்வதுமில்லை. தவ்ஹீத் ஜமாஅத் செய்த ஆட்பாட்த்தை கண்டித்தவர்களின் முக்கிய நோக்கம்கூட இவர்களின் பேச்சு அந்நியவர்கள் எம்மீது அத்துமீறிவிடுவார்கள் என்ற அச்சத்தினால் எழுந்ததே என்பது உண்மையாகும்.

ஆக நாம் இந்த இனவாதத்தை, எதையாவது இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் அனுகினால் நாம் நிறைய தவறான முடிவுகளை எடுத்துவிடலாம். அதே நேரத்தில் உணர்ச்சிவசத்தோடும் நாம் இதை அனுகக்கூடாது. அப்படி அனுகினால் தேவையில்லாத பிரச்சனைகளும் வரலாம்.

நபிமார்களின் வரலாறுகளை எடுத்தக்கொண்டால் அவர்கள், அனைவருமே ஆரம்பத்தில் சிறுபாண்மையாகவே இருந்துள்ளார்கள். அப்படியானால் சிறுபாண்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் பெருமளவு வழிகாட்டல்களை நபிமார்களின் வரலாறுகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். நபிமார்கள் எப்படி அந்த இடங்களில் மார்க்கத்தைப் பின்பற்றினார்கள்? அவர்களுக்கு காபிர்கள் கொடுத்ததொல்லைகள் என்ன? அப்போது அவைகளை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? என பல வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இந்த இனவாதம் பற்றி பேசக்கூடிய எமது அறிஞர்கள் அதன் பக்கம் தன் பார்வையை செலுத்தியதாகத் தெரியவில்லை. அல்லது தேவைக்கான தகவல்களை மட்டும் அங்கிருந்து எடுத்துக் கொண்டு மற்றவைகளை கவணிக்காதது போல் நடந்து கொள்ளும் முறையை நாம் அவதாணிக்கலாம்.

எம்மீதான தப்பபிப்பிராயங்களை நீக்கும்படி சொன்னதாக வரும் வஹீயின் வசனங்களை மட்டும் எடுத்துக்கூறி விட்டு செல்லும் நிலை உள்ளது. பிர்அவுன்இ மூஸா(அலை) அவர்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் போது, பல நியாயமான கேள்விகளை கேட்டு, இயலாத போது “இந்த ஊரைவிட்டு உங்களை வெளியேற்றும் நோக்கில்தான் இவர் வந்துள்ளார்” என நாடு பிடிக்கும் எண்ணம் மூஸா(அலை) அவர்களுக்கு இருப்பதாக பிரச்சாரம் செய்தான். ஜவ்பர் இப்னு அபிதாலிப்(ரலி) தலைமையில் அபீஸினியாவுக்குச் சென்ற முஸ்லிம்கள் மீது அவதூறுகளை மக்கா காபிர்கள் மன்னர் நஜ்ஜாஸிக்கு சொன்ன போது, ஜவ்பர் இப்னு அபிதாலிப்(ரலி) அந்த மன்னர் சபையை எப்படி அனுகினார்? எப்படி பேசினார்? உணர்ச்சிவசப்பட்டாரா? அஞ்சினாரா? ஆட்சியாளரை அல்லது அங்குள்ள பெரும்பாண்மையின கிறுஸ்தவர்களை திருப்திப் படுத்த முனைந்தாரா?

இது போன்ற படிப்பினைகள் எமக்கு முக்கியமானது. பிரச்சனையை தூண்டுவதற்கு என ஒரு குழு தயாராகி விட்டால், நாம் என்ன சமாதானத்தை சொன்னால் ஒரு போதும் அவர்களைத் திருப்திப்படுத்தவே முடியாது. பிழையாக புரியப்பட்ட புரிதல்களால் ஏற்படும் இனவாதத்தை மட்டுமே முஸ்லிம்களின் நன்னடத்தை மூலம் குறைக்கலாம். ஆனால் இது அப்படியல்ல. நன்கு திட்டமிட்டு, வெளிநாட்டுக் காய்நகர்த்தல் மூலம், அரசியல் பின்புலங்களுடன் செய்யப்படும் இந்த இனவாத நடவடிக்கையை, அல்லது அதன் செயற்பாட்டாளர்களை ஒருபோதும் திருப்திப்படுத்தவே முடியாது.

இந்த இன வாதக்கருத்துகள் இலங்கைக்கு மட்டும் உரியதோ, அல்லது தற்போதைய காலத்திற்கு மட்டும் புதிதானதோ அல்ல. நூஹ்(அலை) அவர்களின் காலம் தொடக்கம் உலகில் ஏற்பட்டு வரும் பிரச்சனை. இஸ்லாம் என்று சொன்னால் பிரச்சனைதான். இது உலக நியதி. இது ஏற்பட்டே ஆகும். எந்த வகையில் முஸ்லிம்கள் நடந்தாலும் இதை குறைக்க முடியாது.

“வரக்கத் இப்னு நவ்பல்(ரலி) நபி(ஸல்) அவர்களைப் பார்த்து “நீங்கள் கொண்டு வந்தது போல் யார் கொண்டு வந்தாலும் இந்த சமுதாயம் அநியாயம் செய்தே ஆகும்” என சொன்னார். இது அவரின் மார்க்கக் கல்வியின் வெளிப்பாடு. இந்த இனவாதத்தை எதிர்கொள்ள இலங்கை முஸ்லிம்கள் என தங்களைச் சொல்லிக்கொள்பர்களுக்கு தடையாக இருப்பது அல்லாஹ்வின் தூதர் எச்சரித்த “உலக மோகமும் மரணம் பற்றிய பயம்தான்” என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இப்போதைய நிலைமைகளை நல்ல அறிவாளிகளைக் கொண்டுள்ள சபையில் மசூறா செய்யப்படுகிறது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கோழைகளாக உள்ளனர். நாங்கள் எப்படி இந்தப்பிரச்சனையை எதிர்கொள்வது? என மசூறாச் செய்தால் அவர்கள் சொல்லும் பதில் “அரசாங்கத்தை ஊரடங்கு சட்டம் போடுமாறு சொல்லி விட்டு நாம் வீட்டில் அமர்ந்து கொள்வோம்” என ஆலோசனை சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் அறிவாளிகள்தான். ஆனால் கோழைகள். இப்படியொரு தலைவர்கள் கூட்டத்தினரை வைத்துக்கொண்டு ஆலோசனை செய்தால் அவர்கள் கவலைப்படுவதெல்லாம் முஸ்லிம் சமுகத்தினுடைய இழப்பை மட்டும்தான். அதுதான் நபிகள் நாயகம் எச்சரித்த மரணம் பயமும், உலக மோகமும். அறிவாளி மட்டுமே மசூறாவுக்குப் போதாது. அவர் தைரியமானவராக இருக்க வேண்டும்.

இதற்கு பத்ர் யுத்தம் நல்ல படிப்பினை. மிகவுமே சிறிய கூட்டத்தினராக முஸ்லிம்கள் இருந்து கொண்டு பெரும் படையை எதிர்கொள்ளும் நிலையில் நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் “யுத்தம் செய்வதா? வியாபார கூட்டத்தை குருக்கிடுவதா?” என மsuறா கேட்ட போது “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடலில் குதிக்கச் சொன்னாலும் நாங்கள் அதற்கும் தயார்” என்றார்கள். அப்படிப்பட்ட சிந்தனையாளர்கள் அறிவாளிகள் வீரமிக்கவர்கள், பின்விளைவுகளை அல்லாஹ்விடம் ஒப்படைக்கும் சிறந்த தலைவர்களே மசூறா செய்ய தகுதியானவர்கள். ஒரு சமுதாயத்தின் தலைவர்கள் அச்சப்படவே கூடாது. அச்சப்பட்டால் அது சுமுக வாழ்வை ஏற்படுத்தாது. வஹியின் தெளிவுகளை ஆதரமாக்கிக் கொள்வதன் மூலமே பாதைகளை அடைய முடியும் என்பதை நம் சமுதாய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

-இப்னு அப்துல் லத்தீப்-

Comments