சிறுபான்மை மக்களை எம்மிடம் இருந்து தூரமாக்க ஒரு இனவாத சக்தி செயற்பட்டது...
நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதன் மூலம் அரசாங்கம் புதிய அடக்குமுறையொன்றை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள முன்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..
சிறுபான்மை மக்களை எம்மிடம் இருந்து தூரமாக்க ஒரு சக்தி எமது அரசின் காலத்தில் செயற்பட்டது அதே சக்தி தற்போது நாட்டில் மீள செயற்பட துவங்கியுள்ளது.
இந்த அரசின் ஊழல் மோசடிகளை திசைதிருப்ப ஒரு உக்தியாக இனவாத நடவடிக்கைகள் குறித்த சக்திகள் முன்னெடுக்கின்றன.
மேலும் நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் எனத் தெரிவித்து, இந்த பொலிஸ் பிரிவின் ஊடாக விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன, உதய கம்மம்பில மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று முன்தினம் (21) ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.

Comments
Post a Comment