“பள்ளிகள் அதிகம், முஸ்லிம்களை விரட்ட வேண்டும்”: அளுத்கமவை மீண்டும் நியாபகம் ஊட்டும் கண்டி ஊர்வலம்
பௌத்த இனவாத அமைப்புக்களின் ஊர்வலம் சற்று முன்னர் கண்டி பேராதெனிய கெதம்பே பிரதேசத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டுள்ளனர்.
பௌத்த பிக்குகள், முதியோர்கள் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளதை பார்க்கக் கூடியதாக உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் தங்களது தலையில் பொதுபலசேனாவின் கொடியை கட்டியுள்ளனர்.
இலங்கைத் தேசியக்கொடிக்கு பதிலாக சிங்கமும் பௌத்த சின்னமும் பொறிக்கப்பட்டுள்ள கொடிகளை ஏந்திக் கொண்டு செல்கின்றனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘ “பள்ளிகள் அதிகம்”, “பள்ளிகள் அதிகம்” என்றும் “அரேபியாவுக்கு விரட்ட வேண்டும்” என்ற கோசங்களை எழுப்பிக்கொண்டு செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இந்த ஊர்வலத்தின் ஆரம்பத்தில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார பிக்கு ஊடகங்களுக்கு பெரிய உரையொன்றை ஆற்றியிருந்தார்.
பிக்குகளின் இவ் ஊர்வலத்தில் மட்டு விகாராதிபதியும் பங்கு கொண்டுள்ளார்.
பௌத்த மதத்தை பாதுகாப்பதாக கூறி அனுமதிபெற்று ஊர்வலம் நடத்தும் இப்பிக்குகள் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களையே எழுப்பிக்கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது.
இவ் ஊர்வலம் அளுத்கமயில் நடைபெற்ற ஊர்வலத்தை நியாபகம் ஊட்டுவதாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.










Comments
Post a Comment