மதுபான விருந்தினால் சிக்கலில் சிக்கிய மைத்திரி!

இலங்கை இசையுலக மேதையான பண்டித அமரதேவாவின் மறைவுக்கு ஏழு நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவின் பிரியாவிடை நிகழ்வில் மதுபான விருந்து அளிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பண்டித அமரதேவவில் இறுதிச்சடங்கு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

பண்டித அமரதேவவின் மறைவுக்கு ஏழு நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்க ஜனாதிபதி அறிவிப்பு விடுத்திருந்தார்.

அத்துடன், அவரது இறுதிச்சடங்கு நடைபெறும், நேற்றுமுன்தினம், கொழும்பில் மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதேவேளை, இந்தியத் தூதரகம், வெள்ளிக்கிழமை இரவு, கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா விடுதியில், வை.கே.சின்ஹாவுக்கு பிரியாவிடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

பண்டித அமரதேவாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள், பிரமுகர்கள் பலரும், இந்தியத் தூதுவரின் பிரியாவிடை நிகழ்விலும் பங்கேற்றிருந்தனர்.

இந்த பிரியாவிடை நிகழ்வில், மதுபானங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளதாக ஆங்கில ஊடாகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரியாவிடை நிகழ்வில், மதுபான போத்தல்களுக்கு அருகே இந்தியத் தூதுவரும், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியும் காணப்படும் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Comments