சவூதி அரேபியாவுடன் செய்த, ஒப்பந்தம் பற்றி விமர்சனம்

சவூதி அரேபியா இராச்சியத்திற்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தம் காரணமாக இலங்கை 4.5 பில்லியன் வருமானத்தை இழக்கும் நிலையில் உள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டுக்கு பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டணம் ரூபா 5000 பெறுமதியான அமெரிக்க டொலரிலிருந்து தற்போது ரூபா 1560 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்க செயலாளர் விஜய உந்துப்பிடிய தெரிவிக்கையில், குறித்த ஒப்பந்தம் இரகசியமான முறையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது ஜனவரி முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படும். இலங்கை 4.5 பில்லியன் இழக்க வேண்டி வருமாயின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமைச்சரே அதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் சவூதி அரேபியா இராச்சியத்திற்கு 36,000 பணிப் பெண்கள் இலங்கையில் இருந்து செல்கின்றனர். இரண்டு வருட ஒப்பந்த காலத்தை நிறைவு செய்யும் பணிப் பெண்களுக்கு குறித்த சங்கத்தினால் போனஸ் கூட வழங்கி வைக்கப்படும் என்றார்.

இலங்கையிலிருந்து பணிப் பெண்களை அனுப்புவதற்காகவே குறித்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments