மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நடப்பது என்ன? : 16 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)
மாளிகாவத்தை மையவாடிக் காணியை அபகரித்து நீதிமன்ற உத்தரவையும் மீறி தனியார் நிறுவனமொன்று 8 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்து வருகின்றது.  இதேவேளை மையவாடிக் காணிக்கு அருகிலுள்ள மின்மாற்றியை மையவாடிக் காணிக்குள் அமைப்பதற்கு எதிராக கொழும்பு மாநகர சபையினால் சட்ட விரோத கட்டிடத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  எனவே குறித்த செயற்பாடுகளுக்கு எதிராக நாளை மறுதினம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து கொழும்பு மாநாகர சபை டவுண் ஹோல் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;


மாளிகாவத்தை மையவாடிக் காணியை பாதுகாப்பதற்காக இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் கடந்த 15 வருடங்களாக போராடி வருகிறது. 


நீதிமன்ற உத்தரவினையும் மீறி முன்னைய அரசாங்கத்தின் உயர் பீடங்களின் ஒத்துழைப்புடன் 8 மாடிக் கட்டட நிர்மாணம் பூர்த்தியாகியுள்ளது. 


தற்போது அருகிலுள்ள மின்மாற்றியை அவ்விடத்திலிருந்து அகற்றி மையவாடிக் காணிக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் இணைந்து மேற்கொண்ட எதிர் நடவடிக்கையினால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இச் சதித் திட்டங்களுக்கு ஆதரவாக கொழும்பு மாநாகர சபை ஆணையாளர் வி.கே.ஏ.அநுர செயற்படுவதோடு இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றியை அவ்விடத்திலிருந்து அகற்றி மையவாடி காணிக்குள் நிறுவுவதற்கு அனுமதியை வழங்கியுள்ளார்.
மாநகரசபை சட்டவிரோத கட்டிடத்துக்கு எதிராக தொடர்ந்திருந்த வழக்கினையும் வாபஸ் பெற்றுள்ளார். 


முஸ்லிம் சமூகத்துக்குச் சொந்தமான மாளிகாவத்தை மையவாடிக் காணி 37 ஏக்கரில் 26 ஏக்கர் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது.
தற்போது 11 ஏக்கர்களே எஞ்சியுள்ளன. 4,25,000 முஸ்லிம்களின் மையவாடிக் காணியை பாதுகாத்துக் கொள்ள முஸ்லிம் சமூகம் முன் வரவேண்டும்.


எனவே கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு தெமட்ட மரத்தடி ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து சென்று கொழும்பு மாநகர சபை டவுண் ஹோல் கட்டிடத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. 


இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜமா அத்தாராகிய உங்களது பூரண ஒத்துழைப்பை வேண்டுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments