Skip to main content
குர்ஆனை தெருக்களில் விமர்சிக்காதீர் சந்தேகங்களை எம்மிடம் கேளுங்கள் – ஜனாதிபதி முன் ஞானசாரவுக்கு ரிஸ்வி முப்தி

புனித குர்ஆன் கருணையையும் அன்பையுமே போதிக்கிறது. ஏனைய மதங்களை நேசிக்கும் படியே கூறியுள்ளது. இஸ்லாம் சம்பந்தமான விடயங்களை, குர்ஆனை தெருக்களில் விமர்சிக்காதீர்கள். விளக்கங்கள் தேவையென்றால் எம்மிடம் கேளுங்கள்.
பிரச்சினைகளைக் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள முன்வாருங்கள். இது எமது தாய்நாடு. நாம் நாட்டு பற்றுள்ளவர்கள், சமாதானத்தை விரும்புபவர்கள் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி பௌத்த மதத் தலைவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்கள் மற்றும் மத விவகார அமைச்சர்கள், கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலே உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
முஸ்லிம்கள் நாம் அமைதியை விரும்புபவர்கள். புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள். எங்கள் மீது நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் என்றால் சந்தேகங்களுக்கான தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வீணாக குர்ஆனையும் முஸ்லிம்களையும் எமது கலாசாரங்களையும் விமர்சித்து அவமதித்துக் கொண்டிருந்தால் நாட்டில் நல்லிணக்கம் உருவாக மாட்டாது.
முஸ்லிம்கள் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள். நாம் தீவிரவாதிகளல்ல. தீவிரவாத இயக்கமான ஐ.எஸ் அமைப்புடன் எம்மை தொடர்புபடுத்தி குற்றம் சுமத்தப்படுகின்றது. இலங்கையில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்தது உலமா சபையே இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. மனிதபடுகொலையை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.
2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஐ..எஸ். அமைப்பைக் கண்டித்து என்னால் உரையாற்றப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. ஐ..எஸ் அமைப்பு இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாக செயற்படுகின்ற அமைப்பு என நாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். என்றாலும் ஐ..எஸ். உடன் தொடர்ந்தும் எம்மை சம்பந்தப்படுத்துகிறார்கள்.
எமக்கிடையே பிரச்சினைகள் இருந்தால் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். சிங்களவர்கள் முஸ்லிம்களைப் பற்றி புகழ்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளமையை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். கருணாரத்ன ஹேரத் முஸ்லிம் நீதிய (முஸ்லிம் சட்டம்) என்று புத்தகம் ஒன்று எழுதியுள்ளார் ஐ.எஸ் தீவிரவாதத்தை நாம் ஆதரிக்கவில்லை. இலங்கையரில் ஐ..எஸ் தீவிரவாதிகள் இருந்தால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துங்கள்.
ஷரீஆ சட்டம் ஒரு தீவிரவாத சட்டமல்ல. அது அல்லாஹ்வின் சட்டம் ஷரீஆ தெளிவுகளை நாம் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கின்றோம். நாமனைவரும் வேறுபாடுகளை மறந்து இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபடவேண்டும். நல்லிணக்கத்தின் பங்காளர்களாக மாறவேண்டும். என்றார்.
ஞானசார தேரர்
நாங்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையோ, தமிழர்களின் கோவில்களையோ தாக்கவில்லை. பௌத்த சமயத்துக்கு ஏனைய சமயத்தவர்களை மதம் மாற்றவில்லை நாம் நல்லிணக்கத்தையே விரும்புகிறோம். பௌத்தம் நல்லிணக்கத்தையும், கருணையையுமே போதிக்கிறது என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் நேற்று முன்தினம் சர்வமதத் தலைவர்களை விளித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
என்றாலும் முஸ்லிம்கள் தங்களது புனித தலங்களாகக் கொண்டுள்ள இடங்கள் தொடர்பில் சில சிக்கல்கள், பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
பௌத்த மரபுரிமைகள் ஏனைய மதத்தவர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. எமது பாரம்பரிய பௌத்த வரலாற்றுக்கு சான்றாகவுள்ள தொல்பொருள் பிரதேசங்கள் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கூரகல, தெவனகல, முகுது மகாவிகாரை, புனித பூமி காணிகள் முஸ்லிம்கள் வசமுள்ளன.
இவை தொல்பொருள் ஆய்வு பிரதேசங்களாகும். இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொல்பொருள் சட்டம் அமுலாக்கப்படவேண்டும் எனக் கோருகிறோம்.
முகுது மகாவிகாரைக்குச் சொந்தமான காணி 276 ஏக்கர்களாகும். இந்த 276 ஏக்கர்களில் 3 ஏக்கர்களைத் தவிர எஞ்சிய காணி முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
அக்காணியில் முஸ்லிம்கள் வீடுகளை நிர்மாணித்துள்ளார்கள். முகுது விகாரை பன்சலைக்கு செல்வதற்கான பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ளது. தற்போது பன்சலைக்கு செல்வதற்கு கடலோரப் பாதையே பயன்படுத்தப்படுகிறது. முகுது விகாரை பன்சலைக்கான பெயர் பலகையும் அப்பகுதி மாற்று இனத்தலைவர்களால் சிதைக்கப்படுகிறது. தொல்பொருள் பிரதேசங்கள் இவ்வாறு கையாளப்படுவது தொல்பொருள் சட்டத்தினால் பாதுகாக்கப்படவேண்டும். என்றார்.
சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர்.
சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உரையாற்றுகையில்;
இன்று நாட்டில் பௌத்தத்துக்கும், பௌத்த மக்களுக்கும் பல சவால்கள் உருவாகியுள்ளன. பௌத்தர்கள் ஏனைய மதங்களுக்கு மதம் மாற்றப்படுகிறார்கள். ஆனால் நாம் எவரையும் எந்த மதத்தினரையும் பௌத்தத்துக்கு மதம் மாற்றவில்லை. இன்று பௌத்த மத உரிமைகள், வரலாற்று பிரதேசங்கள் கிழக்கில் முஸ்லிம்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
கண்டியில் பள்ளிரோட் எனும் பெயர்க்கல் எம்மால் உடைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த பள்ளிரோட் என்ற பாதை முன்பு எஹலபொல குமாரிஹாமி என்ற பெயரிலே இருந்தது. இப்பெயரே பள்ளிரோட் என்று மாற்றப்பட்டது.
எஹலபொல குமாரிஹாமி மத்தும பண்டாரவின் தாயாராவார். அன்று பெயர் மாற்றப்பட்ட போது நாம் எதிர்க்கவில்லை. அன்று எமக்குள் நல்லுறவு இருந்தது. நாம் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம். பிரச்சினைகள் இருக்கவில்லை.
ஆனால் இலங்கையில் முஸ்லிம்களிடையே வஹாபிஸம் பரப்பப்பட்டதன் பின்பே பிரச்சினைகள் உருவாகின. முஸ்லிம் பெண்கள் கண்களை மாத்திரம் மறைக்காது முழு உடலையும் மறைத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் யார்? ஆணா? பெண்ணா? என்று அடையாளம் காணமுடியாதுள்ளது. நாட்டில் அடையாள அட்டை அமுலில் இருப்பது நபர்களை அடையாளம் காண்பதற்கல்லவா? ஷரீஆ சட்டமும் விமர்சனத்துக்குரியதே. பெண்களின் திருமண வயதெல்லை ஆகக்குறைந்தது 12 என ஷரீஆ சட்டம் கூறுகிறது. இதனை அனுமதிக்க முடியாது. பௌத்த நாட்டில் இவ்வாறான சட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது.
பௌத்தர்கள் பலாத்காரமாக சில சலுகைகளை வழங்கி மதம் மாற்றம் செய்யப்படுகிறார்கள். இலங்கையில் மதமாற்றம் தடைசெய்யப்படவேண்டும் என்றார்.
கலந்துரையாடலில் அமைச்சர்கள் எம்.எச்.ஏ.ஹலீம், ஜோன் அமரதுங்க, விஜேதாச ராஜபக் ஷ மற்றும் பௌத்த மதத் தலைவர்கள் தரப்பில் பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் அதன் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் உட்பட்ட குழுவினரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் சார்பில் உலமாசபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ..எம்.ரிஸ்வி முப்தி தலைமையிலான குழுவினரும் தேசியசூரா சபையின் சார்பில் அதன் தலைவர் தாரிக் மஹ்மூத் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்து சமயத் தலைவர்களும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இதில் பங்கு கொண்டிருந்தனர். மகாநாயக்க தேரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் தற்போது மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய சர்வ மதத் தலைவர்கள் அடங்கிய விஷேட குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளார். இக்குழு மாதத்துக்கு இருமுறை ஒன்றுகூடி பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி மதத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
Comments
Post a Comment