முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : குர்ஆன் ஹதீஸுக்கு முரணாகக்கூடாது – கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம்
முஸ்லிம் தனியார் சட்டத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணான எந்தவொரு திருத்தங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானமொன்றினை கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் நிறைவேற்றியுள்ளது.
நேற்றுமுன் தினம் இரவு கொழும்பு மருதானை ஸாஹிரா பள்ளிவாசலில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கூட்டத்திலே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தில் 12 பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் அங்கம் வகிப்பதுடன் இவற்றில் சுமார் 175 பள்ளிவாசல்கள் உள்ளடங்குகின்றன.
நேற்று முன்தினம் நடைபெற்றகூட்டத்தில் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேலும் நாட்டில் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பேரினவாதக் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் ஆராயப்பட்டது.
பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொண்டு பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகள் பெற்றுக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
நாட்டில் சமூகத்துக்கு எதிரான அவசர நிலைமைகள் மற்றும் பரப்பப்படும் பொய் வதந்திகளின் போது செயற்படுவதற்கென ஒவ்வொரு பள்ளிவாசலில் இருந்தும் 3 பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
புதிய அரசியல் அமைப்பு ஆக்கத்தில் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிப்படையாத வகையில் கவனம் செலுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சாபிர் ஹாசிம், அஸ்லம் ஒத்மான் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.
(நன்றி விடிவெள்ளி)


Comments
Post a Comment