Skip to main content
ஞானசாரர் பற்றி, ஜனாதிபதி தெளிவுபடுத்துவாரா..?
நாட்டின் தெருக்களிலும் ஊடக மாநாடுகளிலும் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களிலும் இந்நாட்டை தாய்நாடாகக் கொண்டுள்ள முஸ்லிம்களின் புனித குர்ஆன் அவமதிப்புக்குள்ளானது. பௌத்த கடும்போக்குவாதிகள் குறிப்பாக பொதுபலசேனா இந்த செயற்பாடுகளைத் திட்டமிட்டு முன்னெடுத்தது.
முஸ்லிம்கள் உயிரிலும் மேலாகக் கருதும் புனித குர்ஆனை மாத்திரமல்ல அதையும் கடந்து அல்லாஹ்வின் மீதும் அவர்கள் விமர்சனங்களை நிறைத்தார்கள். நிந்தித்தார்கள். இந்நிலையில் நாட்டில் மீண்டும் ஓர் இன முறுகலை ஏற்படுத்தி அசாதாரண நிலையை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. இதில் அரசியல் பின்புலமும் இருக்கிறது என உளவுப் பிரிவினர் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியதன் பின்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து மதத்தலைவர்களையும் அனைத்து மதங்களுக்கும் பொறுப்பான அமைச்சர்களையும் தனது செயலகத்துக்கு அழைத்து கலந்துரையாடினார்.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தேசிய ஒருமைப்பாட்டினையும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதற்கென்று தனியான அமைச்சொன்று நிறுவப்பட்டது.
அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டார். இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டார். இதற்கான செயலகம் ஜனாதிபதியின் அலுவலகத்திலே அமைந்துள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் திட்டப்பணிகள் என்ன என்பது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 'அடிப்படை உரிமைகளை மதிக்கும் சட்ட விதிகள், சமத்துவம் மற்றும் பன்மைத்துவத்தினைப் பாதுகாத்து சகல பிரஜைகளும் தமது இனம், சமயம், மொழி, சாதி,வயது, பால், பாலினம், பிறப்பிடம் மற்றும் அரசியல் கொள்கைகள் என்பவற்றினை வேற்றுமையாகக் கொள்ளாது கெளரவமாக வாழ்வதற்குத் தேவையான சமூகம் ஒன்றினை மேம்படுத்தல்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதத்தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு
நாட்டில் தொடர்ந்து இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் முறுகல் நிலை உருவாகிய நிலையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதத்தலைவர்களையும் அனைத்து மதங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களையும் சந்தித்தார். இந்தச் சந்திப்பு கடந்த 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவணா பலய, சிங்ஹலே போன்ற கடும் போக்குவாத பௌத்த அமைப்புகள் சிலவாரங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடத்திய ஆர்ப்பாட்டம், ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா அத் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்களுக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம், கடந்த 3 ஆம் திகதி குறிப்பிட்ட பௌத்த கடும் போக்கு அமைப்புகள் மட்டக்களப்புக்கு மேற்கொள்ள முற்பட்ட விஜயம், மட்டக்களப்பு மங்களராமய அதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் இனங்களை வெறுப்பூட்டும் பேச்சுக்களும் செயற்பாடுகளுமே ஜனாதிபதியை உடனடியாக செயலில் இறக்கின எனக்கூறலாம். நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒரு அச்சநிலை உருவாகியுள்ள இச்சந்தர்ப்பத்தில் அந்தப் பீதியைக் களைவதற்காகவே ஜனாதிபதி இம்முயற்சியை மேற்கொண்டார்.
ஞானசார தேரர் ஏன் அழைக்கப்பட்டார்?
ஆனால் பிணை நிபந்தனைகளை தொடர்ந்து மீறிவரும் ஞானசார தேரருக்கு சட்டம் ஏன் சலுகை வழங்கியுள்ளது? ஏன் அவர் கைது செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. இந்நாட்டில் காவியுடைக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு மற்றொரு சட்டமா? என்று பெரும்பான்மையோர் விமர்சித்து வருகிறார்கள். சர்வமதத் தலைவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர் அழைக்கப்பட்டமைக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து பலத்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ.ல.மு.கா.செயலாளர் ஹசன் அலி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வமத தலைவருடனான கலந்துரையாடலுக்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அழைக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பினை முஸ்லிம் சமூகம் சார்பில் வெளியிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவினை பகிரங்கமாக பலரும் பார்த்திருக்க கிழித்தெறிந்த ஒருவர் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருக்கக்கூடாது. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவும் இது நீதிமன்றினை அவமதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றினை முன்பு அவமதித்ததற்காக அவர் நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் பல வழக்குகளின் பிரதிவாதி. அவருக்கு ஒரு போதும் அங்கீகாரம் அளிக்க முடியாது. இவர் கைது செய்யப்பட வேண்டியவர். விசாரணைக்குட்படுத்த வேண்டியவர். நாட்டில் இடம்பெற்ற இனரீதியான முறுகல்களுக்கு இவரே காரணமானவர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தப் பின்னணியில் இவர் அழைக்கப்பட்டார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தே.ஐ.மு. தலைவர் அசாத்சாலி
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலியும் ஞானசார தேரர் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டமைக்கு பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது இனங்கள், மதங்களுக்கிடையில் உருவாகியுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஒன்று கூட்டிய சர்வமதத் தலைவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர் அழைக்கப்பட்டிருக்கக் கூடாது.
ஞானசார தேரரை வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும், தேசிய ஒற்றுமையையும் பேசுவதில் பயனில்லை. நீதிமன்றத்தின் பிணை நிபந்தனைகளை மீறி சுதந்திரமாக நடமாடிவரும் ஒருவர் அழைக்கப்பட்டமை அவருக்கு அங்கீகாரமளித்ததற்குச் சமமாகும். இது அநீதியாகும். சட்டம் அனைவருக்கும் சமமானதாக அமுல்படுத்தப்படவேண்டும்.
கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்படவேண்டிய ஒருவருடன் எவ்வாறு நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் பற்றிப் பேச முடியும். இது தவறாகும். எவரது ஆலோசனையின் பேரில் ஞானசாரதேரர் அழைக்கப்பட்டார்? எந்த நோக்கத்திற்காக அழைக்கப்பட்டார் என்பது நாட்டிற்குத் தெளிவுப்படுத்தப்படவேண்டும் என்றார்.
ஞானசாரதேரர் என்ன கூறினார்?
சர்வமத அமைச்சர்களும் சர்வ மதத்தலைவர்களும் ஜனாதிபதி செயலகத்தில் வந்தமர்ந்து சுமார் 10 நிமிடங்கள் தாமதித்தே ஞானசார தேரர் அவ்விடத்தை அடைந்தார். அவருக்கு முன்பே அஸ்கிரிய மாகநாயக்க தேரர், மல்வத்த மகாநாயக்க தேரரின் பிரதிநிதி, சிங்கள ராவயவின் தலைவர், செயலாளர் வந்து அமர்ந்திருந்தனர்.
-ARA.Fareel--
Comments
Post a Comment