வட கிழக்கு முஸ்லிம்களினுடைய பூர்வீக காணிகளை திருப்பி ஒப்படைப்பதே முஸ்லிம்களுக்கான நிரந்தர தீர்வு- பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்.
(ihzana fareed)
1985ம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நாட்டிலே ஏற்பட்ட புரையோடிய யுத்த சூழ் நிலைகளினால் வடகிழக்கில் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக வடகிழக்கில் முஸ்லிம்கள் இழந்துள்ள பூர்வீக நிலங்களை திருப்பி சட்டரீதியான ஆவணங்களுடன் திருப்பி கொடுக்கின்ற பட்சத்தில் அது முஸ்லிம்களுக்கு வடகிழக்கில் ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தர தீர்வாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்( PLOTE-DPLF) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல உயர்தர வகுப்பிற்காக தமிழ் பாட ஆசிரியருமான அமல் என அழைக்கப்படும் வியாழேந்திரன் உடனான நேர்காணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பிரிக்கப்பட்டிருக்கின்ற வடகிழக்கானது மீண்டும் இணைக்கபடுகின்ற பொழுது முஸ்லிம்களுக்கான பூர்வீக காணிகள் சம்பந்தமான பிரச்சனையினை எவ்வாறு நீங்களும் உங்களினுடைய கட்சியியும் முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என வினவிய பொழுது.. இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகமானது அவர்களுடைய அதிகாரங்களுக்கு கீழ் வாழுக்கின்ற இன்னுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஒடுக்கி வாழ நினைக்கமாட்டார்கள் என்பதும் அதற்கு அரசியல்வாதியாக இருக்கின்ற நாங்கள் ஒருபொழுதும் உடந்தையாக இருக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அத்தோடு வடகிழக்கில் முஸ்லிம்களினுடைய முக்கிய பிரச்சனையாக இருக்கின்ற அவர்களால் யுத்த காலங்களில் இழந்த பூர்வீக கிராமங்கள் மற்றும் நிலபுலங்களை மீள அவர்களுக்கு வழங்குவதற்கு அவர்கள் சட்டரீதியான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளை உரியவர்களுக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளான மாவட்ட செயலாளருக்கும், மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் எங்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
.
ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக சனத்தொகையுடன் குறுகிய நிலப்பரப்பில் வாழுகின்ற முஸ்லிம்களினுடைய முக்கிய பிரச்சனையாக இருக்கின்ற குடி நீர் பிரச்சனை, மற்றும், நெருக்கமான வாழ்விட பிரச்சனைகள் போன்றவற்றிற்கு முஸ்களினுடைய பூர்வீக காணிகள் உரிய முறையில் சட்ட ரீதியான ஆவணங்களுடன் மீள ஒப்படைக்கப்படுகின்ற பட்சத்தில் அது அவர்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பது தன்னுடைய கருத்தாகும் என வடகிழக்கில் சிறுபான்மை சமூகமாக இருக்கின்ற முஸ்லிம்களினுடைய பிரச்சனைகளை நிதானம் கலந்த முற்போக்கு சிந்தனையுடன் பார்ப்பவரும் மாவட்டத்தில் இளைஞர்களினுடைய முழு ஆதரவினை தன்வசம் வைத்துள்ள இளம், படித்த, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் தொடுக்கப்பட்ட வடகிழக்கு இணைப்பு, வடகிழக்கு முஸ்லிம்களினுடைய ஏனைய பிரச்சனைகள், சமகால அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு, வடகிழக்கு இணைப்பிற்கான கிழக்கு மாகாண தமிழ் சமூகத்தின் ஆதரவு, போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு வியாழேந்திரனால் கொடுக்கப்பட்ட விரிவான விளக்கங்களுடனான பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment