அபாயத்தில் சிக்கியிருக்கும் ஜனநாயகத்தை காப்பாற்றுவது இந்நாட்டு முஸ்லிம்களின் கடமை
முன்னாள் அமைச்சர் அஸ்வர்,
இன்று அபாயத்தில் சிக்கியிருக்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் முன்வருவது தலையாய கடமையாகும். இந் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பது முன்னைய காலத்தை விட இன்று மிகவும் தேவைப்பாடாக உள்ளது.
ஆரம்பம் முதல் மார்க்கத்தின் அடிப்படையில், ஜனநாயக வழி முறையில் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை வரலாறு தெளிவாகக் கூறுகிறது என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
பத்தரமுல்லை நெலும் பொக்குன மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் காரியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மா நாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் மக்கள் நலவுரிமைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்குமாக வேண்டி எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் மக்கள் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேரணியில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.
இதேவேளை, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல்அக்ஸாவின் பூமியில் அமெரிக்கா ஜெருசலம் நகரைக் கைப்பற்றி இஸ்ரேலை தலைநகராக்கிக் கொள்ளும் முயற்சிகளில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளமையை முஸ்லிம் உலகம் பலமாகக் கண்டிக்கிறது. கடந்த 40 வருட காலமாக அமெரிக்க சியோனிசவாதிகள் இஸ்ரேலை காப்பதற்கு எடுத்து வந்த முயற்சிகளின் இறுதிக் கட்டமாக இதனை நாம் கருத வேண்டியுள்ளது.
அல்அக்ஸாவைப் பறிகொடுக்க முடியாது. எனவே ஜெருசலத்தை சிதைக்கும் வகையில் அமெரிக்க தூதுவராலயத்தை அங்கு அமைப்பதற்கு ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சியை நாம் உலக முஸ்லிம்களுடன் சேர்ந்து கடுமையாக எதிர்க்கிறோம். ஜெருசலம் முஸ்லிம்களுக்கு சொந்தமான பூமியென ஐ.நா.சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கை ஐ.நாவின் உறுப்பு நாடு என்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்தப் பயங்கரமான முடிவை எதிர்த்து ஐ.நாவில் முறையிட எமது அரசாங்கம் முன்வரவேண்டும் என்றார்.


Comments
Post a Comment