ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தனியான இடம் வழங்க வேண்டும் ; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
நல்லாட்சி அரசாங்கத்தினால் எல்லை மீறிய ஜனநாயக சுதந்திரம் வழங்கப்பட்டமையினால் தற்போது நாட்டில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் அதிகரித்துள்ளன. ஆகையால் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தனியான இடம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் அதிகமாக நடத்தப்படுவதனால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதுடன் மக்களும் அவதியுற்று வருகின்றனர். ஆகையால் இது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய நிலைமை தொடர்வது நல்லதல்ல. ஆகையால் வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதுபோன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments
Post a Comment