அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கொள்கைக்கு இணங்கிச் செயற்பட்ட காரணத்தினாலேயே அத்துரலியே ரதன தேரருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது.
எனவே அவர் சுயாதீனமாக செயற்பட விரும்பினால் கட்சியின் ஆசனத்திலிருந்து விலக வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது கட்சிக் கொள்கைக்கு இணங்கிவிட்டுத் தற்போது கொள்கைக்குப் புறம்பாக செயற்படும் அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை இதுவென்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐக்கிய தேசிய முன்னணியினால் ஜாதிக ஹெல உறுமயவிற்கு வழங்கப்பட்டுள்ள தேசிய ஆசனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அத்துரலியே ரதன தேரர் தான் தனித்து சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயற்படப் போவதாகவும் நல்லாட்சியை சீரமைக்க சக்தி திரட்டப் போவதாகவும் ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இருப்பினும் இன்று வரையில் அந்த நிலைப்பாட்டினை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுவிற்கு அறிவிக்கவில்லை.
இது எவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஜாதிக ஹெல உறுமய கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் எமக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனம் எமது கட்சி உறுப்பினர் என்ற வகையில் ஐக்கிய தேசிய முன்னணியினால் எமக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்தில் அத்துரலியே ரதன தேரர் அமர்த்தப்பட்டார்.
ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கைகளுக்கு இணங்கியே தாம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாக கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போதும் அத்துரலியே ரதன தேரர் அறிவித்திருந்தார்.
ஆனால் அவரின் தற்போதைய செயற்பாடுகள் கட்சி யாப்பிற்கு முற்றிலும் புறம்பாக உள்ளது.
எனினும், அவர் சுயாதீனமாக செயற்படுவேன் என்று தீர்மானித்தது அவரின் தனிப்பட்ட முடிவு என்பதால் அதுகுறித்த பிரச்சினைகள் எமக்கு இல்லை. ஆனால் அவர் கட்சியின் யாப்புக்கு புறம்பாக செயற்படுகின்றபோது எமது கட்சியின் தேசிய பட்டியில் உறுப்பினர் என்ற வகையில் அந்த செயற்பாடுகளை அனுமதியோம்.
எனவே, ஜாதிக ஹெல உறுமயவினால் அவருக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்திலிருந்து விலகி அவர் அரசாங்கத்தினை நெறிப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளதை நாம் எதிர்க்கப்போவதில்லை அதனால் முதற் படிமுறையாக கட்சியின் தேசியப் பட்டியல் பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறும் அவர் மீது கட்சியின் மத்திய குழு மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கையின் விளைவாகவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் எழுத்துமூலம் அறிவித்துள்ளோம்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் உள்ளிருந்து அரசாங்கத்தையே விமர்சிக்கும் சுதந்திரம் இன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறானதொரு தீர்மானம் எடுத்துள்ளமை காலோசிதமானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.


Comments
Post a Comment