முஸ்லிம் நாடுகளிலிருந்து வருவபவர்கள் தீவிரவாதத்தை பரப்பிவருகின்றனர் – BBS
தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உட்பட பல முஸ்லிம் நாடுகளிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து சுமார் இரண்டு இலட்சம் பேர் இலங்கையில் தங்கி தீவிரவாதத்தைப் போதித்து வருகின்றார்கள்.
இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென பொதுபலசேனா அமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
பொதுபலசேனா அமைப்பு இச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.எம்.ரணசிங்கவைச் சந்திக்கவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 10 தேரர்கள் இச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில்,
தீவிரவாதிகளின் ஆதிக்கத்திலிருக்கும் முஸ்லிம் நாடுகளிலிருந்து சுற்றுலா விசாவிலும் மற்றும் மார்க்க போதனைகளுக்காக என்று கூறி இலங்கைக்கு தினமும் முஸ்லிம்கள் வருகின்றார்கள்.
இவ்வாறு வருபவர்கள் தமது சுற்றுலா விசா காலாவதியான பின்பும் நாட்டில் தங்கியிருந்து மார்க்கப்போதனை என்ற பெயரில் தீவிரவாதத்தை போதித்து வருகிறார்கள். இவ்வாறானவர்கள் இவ்வாறு சட்டரீதியாக தங்குவதை தடை செய்யும் வகையில் எமது குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
சுற்றுலா விசா வழங்கும் நடைமுறையிலும் சில விதிகள் பின்பற்றப்பட வேண்டும். வெளிநாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் வருகைதரும் கிறிஸ்தவ போதகர்களும் இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து எம்மவர்களை மதமாற்றம் செய்கிறார்கள். இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்தில் தாமதமில்லாமல் திருத்தங்களைச் செய்யவேண்டியது அவசியமாகவுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப் 7 முஸ்லிம் நாட்டவர்கள் அமெரிக்காவினுள் பிரவேசிப்பதை தடைசெய்துள்ளார். குவைத் நாடும் சில நாட்டவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்கியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருபவர்களை தடைசெய்ய வேண்டுமென நாம் கூறவில்லை. குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டுமென்றே நாம் கோருகிறோம் என்றார்.


Comments
Post a Comment