இலங்கை பெண்களே அவதானம்! எச்சரிக்கை தகவல்



யுவதிகளை கடத்தி கும்பல் ஒன்றினை மொணராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு யுவதிகளை கடத்தி பலாத்காரமாக கொழும்பில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் (மசாஜ் நிலையங்கள்) வேலைக்கமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொணராகலை படல் கும்புர பகுதியில் வைத்து யுவதி ஒருவரை கடத்த முற்பட்ட போது இந்த கும்பலை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர்.

அந்த கும்பலின் பின்னணியில் இருந்து செயற்பட்ட பிரபல தொழிலதிபர் ஒருவரையும் கைதுச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் குறித்த யுவதி பாதையால் செல்லும் போது, மொணராகலையின் பல இடங்களில் அச்சகங்களை வைத்திருக்கும் குறித்த தொழில் அதிபரின் குண்டர் குழு, அந்த யுவதியை கடத்த முற்பட்டுள்ளது.

இதன்போது அந்த குழுவின் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக தொழில் அதிபரையும் கைது செய்துள்ளனர்.

இந் நிலையிலேயே இக்கடத்தல் தொடர்பில் மொணராகலைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர பிரேமசாந்தவின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்ப்ட்ட விசாரணைகளில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இவ்வாறு கடத்தப்படும் யுவதிகள் கொழும்பில் உள்ள குறித்த தொழில் அதிபருக்கு சொந்தமான 5 உடற்பிடிப்பு நிலையங்களில் பலாத்காரமாக சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

மொணராகலையில் உள்ள அச்சகங்களில் சேவைக்கு என இணைத்துக்கொள்ளப்படும் யுவதிகள், சிறிது காலத்தில் அதிக சம்பளத்துக்கு என கொழும்பில் உள்ள இந்த உடற்பிடிப்பு நிலையத்துக்கு குறித்த தொழிலதிபரின் உத்தரவுக்கு அமைய அனுப்படுவதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கடத்த முயன்ற யுவதியும் ஏற்கனவே குறித்த தொழிலதிபரின் கொழும்பு உடற்பிடிப்பு நிலையத்தில் சிறிது காலம் சேவையாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றவர் எனவும்,  இந் நிலையிலேயே அவரை கடத்த முயன்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தனர்.

கைதாகியுள்ள நால்வரையும் மொணராகலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments