'சேர் நீங்கள் சொல்லும் எதையும் செய்கின்றேன்..' : மெஹான் பீரிஸ் பதவி நீக்கம் தொடர்பில் ரகசிய தகவலை வெளியிட்டார் ஜனாதிபதி
.'சேர் நீங்கள் சொல்லும் எதையும் செய்கின்றேன் என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என முன்னாள் பிரதம நீதியரசர் மெஹான் பீரிஸ் தம்மிடம் கோரியதாகவும் இதனால் தான் இவரை பதவியிலிருந்து நீக்கியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரகாபொல வைத்தியசாலையின் கட்டட அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி இரவு எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அப்போதைய பிரதம நீதியரசர் மெஹான் பீரிஸ் வந்தார். என்னை வாழ்த்துவதற்காக அவர் வந்திருக்கின்றார் நான் நினைத்தேன்.
சேர் என்னை நீக்கப் போவதாக தகவல் கிடைத்தது, நீங்கள் சொல்லும் வகையில் செயற்படுகின்றேன் என்னை நீக்க வேண்டாம்” என பிரதம நீதியரசர் கோரியிருந்தார்.
நான் சொல்லும் வகையில் வழக்குத் தீர்ப்புக்களை வழங்குவதாகவே அவர் வாக்குறுதியளித்தார். இதன் மூலம் கடந்த காலங்களில் எவ்வாறு வழக்குத் தீர்ப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
பிரதம நீதியரசரை பணி நீக்க நான் அப்போது தீர்மானித்திருக்கவில்லை. இவ்வாறான ஓர் நபரை இந்தப் பதவியில் நீடிப்பது நாட்டின் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்.
இதனால் பிரதம நீதியரசரை பணி நீக்கத் தீர்மானித்தேன். நான் என்னுடைய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் தெரிவித்தார்.


Comments
Post a Comment