மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக இடம் மாற்றக்கோரி
மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக இடம் மாற்றக்கோரி இன்று செவ்வாய்க்கிழமை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் கடமை புரியும் சுமார் 600 ஆசிரியர்கள் மூதூரிலும் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் மீது மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏற்கெனவேயும் மாணவர்கள் மற்றும் ஒரு பாடசாலையின் ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
வலயக் கல்விப் பணிப்பாளர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசுதல், ஆசிரியர்களை தொழுகைக் கடமையைச் செய்ய விடாது தடுத்தல், கற்கக்கூடிய மாணவர்களுக்கே கற்பியுங்கள் என்று அசிரத்தையான உத்தரவிடல் போன்ற மூன்று பிரதான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டன.
இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்வதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் வாக்குறுதி அளித்திருந்த போதும், அது இன்றுவரை நிறைவேற்றப்படாததால் தாங்கள் மூதூர் வலயத்திலுள்ள ஆசியர்களுடன் இணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.
இனிமேலும் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஆளுநர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



Comments
Post a Comment