பரீட்சை திணைக்களம் மூலம் மத்ரஸா மாணவர்களுக்கு பரீட்சைகள் :விரைவில் சட்டமூலம்
நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள மத்ரஸாக்கள் அனைத்திலும் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு அந்தப் பாடத் திட்டத்தின்படி மௌலவி பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் நடத்தும் வகையில் சட்ட மூலமொன்று முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்பான கலந்துரையாடல்களை உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் நடத்தி வருகிறார்.
இது தொடர்பில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கருத்து வெளியிடுகையில்.
தற்போது நாட்டிலுள்ள மத்ரஸாக்கள் அனைத்திலும் மௌலவி பரீட்சைக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படுவதில்லை. எனவே, மத்ரஸாக்களின் கல்வித் திட்டத்தை ஒன்றிணைக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்பரீட்சை, பரீட்சைகள் திணைக்களத்தின் மூலம் நடத்தப்பட்டால் சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அரசாங்க பரீட்சைத் திணைக்களம் நடத்தும் இந்தப் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சான்றிதழ் ஒன்றும் வழங்கும் வகையில் சட்ட மூலம் தயாரிக்கப்படும் என்றார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் மத்ரஸாக்கள் அனைத்தினதும் பாடத் திட்டங்கள் ஒரே வகையில் அமைய வேண்டும்.
ஒரே தரத்தினைக் கொண்டதாக இருக்க வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்துவந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார்.


Comments
Post a Comment