அரிசிக்கான விலை ஏன் குறையவில்லை


அரிசியின் வரி குறைக்கப்பட்டுள்ளபோதும் அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையாதிருக்க அரிசி வியாபாரிகளே காரணம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில அரிசி மொத்த விற்பனையாளர்களின் மோசடிச் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் தனியார் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது. அது மாத்திரமன்றி அரிசிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய குறைக்கப்பட்டது.

இரண்டு கட்டங்களாக இவை குறைக்கப்பட்டன. முதலில் ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் நான்கு நாட்களுக்கு பின்னர் மேலும் 10 ரூபாவுக்கு குறைக்கப்பட்டது.

முதல் கட்ட 5 ரூபா வரி குறைக்கப்பட்ட போது ஒரு கிலோ அரிசியை 76 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருந்தது.

இரண்டாம் கட்ட வரி குறைப்பின் பின்னர் அரிசியின் விலை இன்னும் குறைவடைந்திருக்க வேண்டும். சுமாராக 65 ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசியைப் பெற முடியுமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை அறிவித்தார்.

Comments