ஹஜ் விண்ணப்பங்களுக்கு வலிதுத்தன்மை 2 வருடங்களே
ஹஜ் குழுவின் தலைவர் சியாத்
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் வலிதுத் தன்மை இரண்டு வருடங்களாகும்.
விண்ணப்பித்து இரண்டு வருடங்களுக்குள் ஹஜ் கடமையை நிறைவேற்றாதவர்களது விண்ணப்பங்கள் பதிவிலிருந்தும் அகற்றப்படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி மொஹமட் தாஹா சியாத் தெரிவித்தார்.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களில் 4000 பேருக்கு 2017 ஆம் ஆண்டின் ஹஜ் கடமையை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.
திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எம்.எல்.எம். அன்வர் அலி கையொப்பமிட்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சவூதி அரேபிய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஹாஜிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதால் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள ஹாஜிகளது பயண ஒழுங்குகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீளளிக்கப்படக்கூடிய 25 ஆயிரம் ரூபா இலங்கை வங்கிக் கணக்கிலக்கம் 2327593 (Hajj Account) வைப்புச் செய்து பற்றுச்சீட்டின் மூலப் பிரதியையும் இணைத்து, இதனுடனுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிக்கு முன்பு திணைக்களத்தில் சமர்ப்பித்து ஹஜ் பிரயாணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஹஜ் குழு பணித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; ‘அநேகமானோர் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விண்ணப்பித்து விட்டு பல வருடங்கள் கடந்தும் கடமைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில்லை. இதன் காரணமாகவே ஹஜ் விண்ணப்பத்தில் வலிது கால எல்லை இரண்டு வருடமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து இறுதி நேரத்தில் கடமையை நிறைவேற்ற முடியாமற் போனவர்களுக்கு இந்த வருடம் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றாலும் அவர்களும் மீளளிக்கப்படக்கூடிய 25 ஆயிரம் ரூபா கட்டணத்தைச் செலுத்தி தங்களது பயணத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வருடத்திற்கான ஹஜ் முகவர்கள் நியமனம் இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே முகவர்களை இப்போதே ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு செய்துக் கொள்ளக் கூடாது என்றார்.


Comments
Post a Comment